குப்பைத் தொட்டியில் தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத பெண் குழந்தை பிணம் கண்டுபிடிப்பு
சென்னை: வண்ணாரப்பேட்டையில் உள்ள ஒரு குப்பைத் தொட்டியில் தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத பச்சிளம் பெண் குழந்தையின் பிணம் ஒரு பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்டு கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வண்ணாரப்பேட்டை திவான்பகதூர் குமாரசாமி தெருவில் உள்ள குப்பைத் தொட்டியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு பிளாஸ்டிக் கவர் கிடந்தது. அதில் பச்சிளம் பெண் குழந்தையின் உடல் இருப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே இது குறித்து வண்ணாரப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் கிடைத்தவுடன் போலீசார் அங்கு விரைந்து வந்து குழந்தையின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தையின் தொப்புள் கொடி கூட அறுக்காமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே, குழந்தை பிறந்தவுடன் அதை ஒரு கவரில் சுற்றி குப்பைத் தொட்டியில் போட்டிருக்கலாம். இதில் குழந்தை மூச்சு திணறி இறந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
கள்ளத் தொடர்பில் குழந்தை பிறந்ததால் குப்பையில் வீசினார்களா அல்லது குழந்தை இறந்து பிறந்ததால் இப்படி செய்தார்களா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications