பிரதமர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை: எல்.கே. அத்வானி

அத்வானியின் 85-வது பிறந்த நாள் நேற்று டெல்லியில் கொண்டாடப்பட்டது. இப்பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய அத்வானி, பிரதமர் பதவிக்கு மேலாக கட்சி எனக்கு நிறைய கொடுத்திருக்கிறது. எனக்கு பிரதமர் ஆகும் விருப்பம் இல்லை என்றார்.
பாரதிய ஜனதா கட்சியைப் பொறுத்தவரையில் நரேந்திர மோடி தொடங்கி அத்வானி, அருண் ஜேட்ல், சுஸ்மா ஸ்வராஜ் வரை நிறையப் பேர் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கிட்டத்தட்ட 70 ஆண்டுகால அரசியல் வாழ்வுக்குச் சொந்தக்காரரான அத்வானியின் இக்கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
2004-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பின் தீவிர அரசியலில் இருந்து முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஒதுங்கிவிட்டார். தற்போது பாரதிய ஜனதா கட்சித் தலைவர் நிதின் கட்காரி பதவி விலகியாக வேண்டும் என்று கலகக் குரல்கள் எழும்பிவரும் நிலையிலும் ஆர்.எஸ்.எஸ்.அமைப்பு அவரை காப்பாற்றி வருவது அத்வானியை அதிருப்தி அடைய வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதனாலேயே பாஜகவின் அண்மைய உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் அத்வானி கலந்து கொள்ளவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இருப்பினும் அத்வானியின் பிறந்தநாளையொட்டி கட்காரி நேற்று அவரது வீட்டுக்குப் போய் 15 நிமிடங்கள் மட்டுமே இருந்துவிட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications