'2ஜி': குற்றம் சாட்டப்பட்டோரின் மனுக்களை டெல்லி ஹைகோர்ட் விசாரிக்க சுப்ரீம் கோர்ட் தடை
டெல்லி: 2ஜி ஸ்பெட்க்ரம் ஊழல் விவகாரத்தில் தொடர்புடையவர்கள் என்று சிபிஐயால் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களின் மனுக்களை எந்த நீதிமன்றமும் விசாரிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான அனைத்து வழக்குகளையும் உச்ச நீதிமன்றம் தவிர மற்ற நீதிமன்றங்கள் விசாரிக்க கூடாது என்று உச்ச நீதிமன்றமே கடந்த ஏப்ரல் மாதம் 11ம் தேதி உத்தரவிட்டிருந்தது.
இந் நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா, திமுக எம்பி கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனராக இருந்த சரத் ரெட்டி உள்ளிட்ட 20 பேர் தங்களை 2ஜி வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இந் நிலையில் 2ஜி வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சிங்வி, ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வேணுகோபால்,
குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்களை விடுவிக்கக் கோரி டெல்லியில் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். தற்போதுள்ள சூழ்நிலையில் டெல்லி உயர் நீதிமன்றம் இந்த மனுக்களை விசாரித்தால் அது 2ஜி தொடர்பான வழக்கு விசாரணையை பாதிக்கும்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரியிருப்பதால், அது 2ஜி வழக்கு விசாரணைக்கு பின்னடைவாக இருக்கும். மேலும் 2ஜி தொடர்பான வழக்குகள் மற்ற நீதிமன்றங்கள் விசாரிக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கூறியுள்ளது என்றார்.
இதை ஏற்ற நீதிபதிகள், 20 பேரின் மனுக்களையும் விசாரிக்க டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு தடை விதித்தனர். மேலும் இந்த வழக்கின் விசாரணை வரும் 19ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
மேலும் பேசிய நீதிபதிகள், இது தொடர்பாக சிபிஐ ஒரு மனுவை தனியே தாக்கல் செய்யலாம். அந்த மனு மீது நாங்கள் தெளிவான தீர்ப்பை தருவோம் என்றனர்.












Click it and Unblock the Notifications