தரைதட்டிய கப்பல் பணியாளர்களைக் காப்பாற்றிய மீனவருக்கு தலா ரூ1 லட்சம்- ஜெ. வழங்கினார்!
சென்னை: நிலம் புயலால் சென்னை பட்டினப்பாக்கம் கடற்பரப்பில் தரை தட்டிய பிரதிபா காவிரி கப்பலின் பணியாளர்களை காப்பாற்றிய மீனவர்களுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா தலா ரூ 1 லட்சம் வழங்கி பாராட்டுத் தெரிவித்தார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், கடந்த 31.10.2012 அன்று வங்கக் கடலில் வீசிய 'நீலம்' புயல் காரணமாக 'பிரதீபா காவேரி' என்ற தனியார் சரக்குக் கப்பல் தரை தட்டியது. அக்கப்பலில் இருந்த 25 பணியாளர்கள் உயிர் காக்கும் படகில் ஏறி கரை சேர முயன்றபோது, அப்படகும் கவிழ்ந்து அனைவரும் கடலுக்குள் வீழ்ந்து உயிருக்கு போராடியபோது, கடும் புயல் வீசிக் கொண்டிருந்தபோது தங்களது உயிரை துச்சமென மதித்து, கடலுக்குள் சென்று கப்பல் பணியாளர்களை மீட்டெடுத்த ஊரூர்குப்பத்தைச் சேர்ந்த மீனவர்கள் வடிவேலு, கலைமணி, உதயமூர்த்தி, மதன் மற்றும் கப்பல் பணியாளர்களை காப்பாற்ற தனது படகினை அளித்த கோபி ஆகிய ஐந்து பேர்களின் வீரச் செயலையும், தன்னலமற்ற சமுதாய அக்கறையையும் பாராட்டி தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று 6.11.2012 அன்று முதல்- அமைச்சர் உத்தரவிட்டார்.
அதன்படி, முதல்- அமைச்சர் ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில், ஊரூர் குப்பத்தைச் சேர்ந்த வடிவேலு, கலைமணி, உதயமூர்த்தி, மதன் மற்றும் கோபி ஆகியோருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையினை வழங்கி பாராட்டி, வாழ்த்தினார்.
முதல்- அமைச்சர் ஜெயலலிதாவிடம் இருந்து நிதியினை பெற்றுக் கொண்ட மீனவர்கள், தங்களது செயலை பாராட்டி அங்கீகரித்ததோடு நேரில் அழைத்து நிதி அளித்து ஊக்குவித்த முதல்- அமைச்சருக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டார்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications