56 மோசடி கிரானைட் குவாரிகளுக்கு ரூ.10,000 கோடி அபராதம்!
மதுரை: மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் மோசடிகளில் ஈடுபட்டு, விதிமுறைகளை மீறி செயல்பட்டு வந்த 56 கிரானைட் குவாரிகளுக்கு ரூ. 10,000 கோடி அபராதம் விதிக்கப்படவுள்ளதாக மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அன்ஷுல் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
மதுரை மேலூர் பகுதியில் 94 கிரானைட் குவாரிகள் விதிமுறைகளை மீறி சட்ட விரோதமாக செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் அரசுக்கு 16 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் புகார் எழுந்தது.இதுதொடர்பாக முன்னாள் ஆட்சித் தலைவர் சகாயம் அரசுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பினார்.
இதையடுத்து பின்னர் வந்த கலெக்டர் அன்ஷுல் மிஸ்ரா தலைமையில் 18 குழுக்கள் அமைக்கப்பட்டு கடந்த 10 வாரங்களாக மேலூர் பகுதியில் உள்ள கிரானைட் குவாரிகளில் சோதனை நடத்தப்பட்டன.
மோசடியில் ஈடுபட்ட குவாரிகள் மற்றும் கிரானைட் அலுவலகங்கள் சீல் வைக்கப்பட்டது. தற்போது கிரானைட் குவாரிகளின் சட்ட விரோத நடவடிக்கைகள் தொடர்பான விசாரணை முடிவுக்கு வந்துள்ளது. குவாரிகளால் அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு, நில ஆக்கிரமிப்பு விவரங்கள், சட்ட விரோதமாக இருப்பு வைக்கப்பட்டுள்ள கிரானைட் கற்கள், குவாரி அதிபர்கள் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் ஆகியவை பட்டியலிடப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக அரசுக்கு இறுதி அறிக்கையை அனுப்ப மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே கிரானைட் முறைகேட்டில் ஈடுபட்டதாக பி.ஆர்.பி. கிரானைட் அதிபர் பி.ஆர்.பழனிச்சாமி கைது செய்யப்பட்டார். மேலும் கிரானைட் அதிபர்கள், அரசு ஊழியர்கள் உள்பட 55 பேர் கைது செய்யப்பட்டனர். மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரைதயாநிதி உள்ளிட்ட கிரானைட் அதிபர்கள் 20 பேர் தலைமறைவாக உள்ளனர்.
இந்த நிலையில் பி.ஆர்.பி. கிரானைட் அலுவலகத்தை திறக்க மதுரை உயர்நீதிமன்றக் கிளை அனுமதி அளித்தது. ஆனால் வேறு பணிகள் செய்ய தடை உள்ளது. இந்த நிலையில், மேலூர் தெற்கு தெருவில் உள்ள பி.ஆர்.பி. அலுவலகத்தின் சீலை உடைத்து போலீசார் திறந்தனர். அங்கிருந்த முக்கிய ஆவணங்கள் நகல் எடுக்கப்பட்டன. அங்கு கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் முக்கிய தஸ்தாவேஜூகளை முழுமையாக ஆய்வு செய்ய தனி குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தவறிழைத்த குவாரிகளுக்கு அபராதம் விதிக்கப்படவுள்ளது. இதுவரை எடுக்கப்பட்டுள்ள கணக்கீட்டின்படி 56 குவாரிகளுக்கு ரூ. 10,000 கோடி அபராதம் விதிக்கப்படவுள்ளது.
இதுகுறித்து கலெக்டர் அன்ஷுல் மிஸ்ரா கூறுகையில், சட்ட விரோத கிரானைட் குவாரி தொடர்பான அனைத்து விசாரணைகளும் இறுதி கட்டத்திற்கு வந்து விட்டன. கள ஆய்வு முடிந்து இறுதி அறிக்கை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகளும் விரைவில் முடிக்கப்பட்டு அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும்.
விதி மீறலில் ஈடுபட்ட 63 குவாரிகளில் 56 குவாரிகளால் அரசுக்கு ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பு மதிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி இந்த 56 குவாரிகளிடம் இருந்து அபராத தொகையாக ரூ.10 ஆயிரம் கோடி வசூலிக்கப்பட வேண்டும். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட கிரானைட் உரிமதாரர்களுக்கு விரைவில் நோட்டீஸ் அனுப்பப்படும். அவர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் கொடுப்பதற்கும் வாய்ப்பு வழங்கப்படும். அதை தொடர்ந்து அபராத தொகை வசூலிக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications