70 அடி கிணற்றில் விழுந்த இளம்பெண்ணை காப்பாற்ற முயன்ற உறவினர் பலி
சேலம்: ஆத்தூர் அருகே 70 அடி கிணற்றில் விழுந்த இளம்பெண்ணை காப்பாற்ற முயன்ற உறவினர் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியானார்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள கீரிப்பட்டியைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன். அவரது மனைவி லலிதா(23). நேற்றிரவு 7 மணி அளவில் லலிதா விவசாயக் கிணறு வழியாக மாட்டை ஓட்டிச் சென்றார். திடீர் என்று மாடு முரண்டு பிடித்ததில் லலிதா நிலை தடுமாறி 70 அடி ஆழ விவசாயக் கிணற்றில் விழுந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த அவரது உறவினர் சிட்டு (எ) ரவி(40) லலிதாவை காப்பாற்ற கிணற்றுக்குள் குதித்தார். ஆனால் ரவி கிணற்றின் மையத்தில் குதித்ததால் அங்கிருந்த மோட்டார் மீது அவர் விழுந்தார். இதில் அவர் தலையில் அடிபட்டு நீரில் மூழ்கி இறந்தார். லலிதா கிணற்றின் ஓரமாக விழுந்ததால் காயமின்றி தப்பினார். கிணற்று சுவறில் துருத்திக் கொண்டிருந்த கற்களைப் பிடித்துக் கொண்டு தத்தளித்துக் கொண்டிருந்தார்.
பின்னர் ஆத்தூர் தீயணைப்பு வீரர்கள் வந்து லலிதாவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications