வைகோவை ‘சாரைப் பாம்பு’ என்று கூறிய நாஞ்சில் சம்பத்தின் உருவபொம்மை எரிப்பு

மதிமுகவின் முக்கிய பிரமுகரான நாஞ்சில் சம்பத் கடந்த வாரம் நக்கீரன் இதழுக்கு அளித்த பேட்டியில், வைகோ சத்தமில்லாமல் கடிக்கிற சாரைப்பாம்பு போல என்னை கடித்து எனக்கு வலியை ஏற்படுத்தி வருகிறார் என்று கூறியிருந்தார்.
இந்த பேட்டி வெளியான உடன் மதிமுக வினர் பலரும் நாஞ்சில் சம்பத்திற்கு கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரு அருகே உள்ள வேர்கிளம்பியில் திருவட்டாரு ஒன்றிய செயலாளர் சேம்ராஜ் தலைமையில் கூடிய மதிமுகவினர், நாஞ்சில் சம்பத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். மதிமுகவை விட்டு வெளியேறு என்று கூறிய அவர்கள், நாஞ்சில் சம்பத்தின் உருவ பொம்மையை தீ வைத்து கொளுத்தினர்.
இந்த போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த குமரி மாவட்ட பொறியியல் அணி அமைப்பாளர், சுரேஷ் குமார், தலைவர் வைகோவைப் பற்றி மதிமுக வில் இருந்து கொண்டே அவதூறு பரப்பி வருகிறார் நாஞ்சில் சம்பத் என்று கூறினார்.
அதிமுக ஆட்சிக் காலத்தில் நாஞ்சில் சம்பத்தின் வீட்டினை இடித்து தரைமட்டமாக்கினார்கள். அப்போது பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த வைகோ சங்கொலியில் கடிதம் எழுதினார். இதனை கண்ட மதிமுக தொண்டர்கள் பணம் அனுப்பி நாஞ்சில் சம்பத்திற்கு வீடு கட்டிக் கொடுத்தனர் என்றார். இதனைக் கூட மறந்துவிட்டு அவர் தலைவரைப் பற்றியே அவதூறாக பேசி வருகிறார் என்று கூறினார். இதன் காரணமாகவே அவரது சொந்த ஊருக்கு அருகிலேயே இந்த போராட்டத்தை தொடங்கியுள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications