சி.பி.எஸ்.சி பாடப்புத்தகத்தில் நாடார்களுக்கு எதிரான கருத்து: நாகர்கோவிலில் வைகோ போராட்டம்
நாகர்கோவில்: சிபிஎஸ்சி பாடப்புத்தகத்தில் நாடார்களை அவமதிக்கும் வகையில் அமைந்துள்ள செய்தியை மத்திய அரசு நீக்காவிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் சி.பி.எஸ்.இ 9-ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் தென் மாவட்டங்களில் இருந்து குமரி மாவட்டத்திற்கு போய் குடியேறியவர்கள் இந்த நாடார் குல பெருமக்கள் என்று அச்சிடப்பட்டுள்ளது. மேலும் ‘சாணார்' என்பதற்கு ‘சாணான்' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனை நீக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் பாடப்புத்தகத்தில் உள்ள தவறான செய்தியை நீக்கக் கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நாகர்கோவிலில் ஆர்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்தில் தலைமை வகித்துப் வைகோ பேசியதாவது:
குமரி மாவட்ட நாடார்குல மக்களையும், தென் தமிழ்நாட்டு வரலாற்றையும் களங்கப்படுத்துவம் நோக்கத்தில் பாடத்திட்டத்தில் கூறப்பட்டுள்ள கருத்து மத்திய அரசின் மன்னிக்க முடியாத அடாத செயலாகும். பாடப்புத்தகத்தில் வரலாற்றை திருத்தியும், உண்மைகளை மறைத்தும், பொய்களை வரைந்தும், திட்டமிட்டே நஞ்சை கொட்டியிருக்கின்றனர்.
குமரி மாவட்ட மக்கள் குறித்த இந்த பொய்ச் செய்திகளை உடனடியாக பாடத்திட்டத்தில் இருந்து டிசம்பர் 28ம் தேதிக்குள் மத்திய அரசு நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மத்திய அரசு நீக்காத பட்சத்தில் டிசம்பர் 30ம் தேதி மார்த்தாண்டத்தில் மிகப்பெரிய அளவிலான போராட்டம் நடத்தப்படும் என்றும் வைகோ கூறினார். நாகர்கோவில் தலைமை அஞ்சலகம் எதிரே நடைபெற்ற இந்த போராட்டத்தில் மதிமுகவினர் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்களும் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications