தேவர் ஜெயந்தி வன்முறை: மதுரை போக்குவரத்து கழகத்திற்கு பல கோடி நஷ்டம்
மதுரை: தேவர் ஜெயந்தி விழா அன்று நடந்த வன்முறை மற்றும் பதற்றம் காரணமாக அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டதால் மதுரை போக்குவரத்து கழகத்திற்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 30ம் தேதி தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. அப்போது பரமக்குடி பகுதியில் நடந்த மோதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். மேலும் மதுரை சிந்தாமணி அருகே பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடந்தன. இந்த வன்முறைச் சம்பவங்களை கண்டிக்கும் வகையில் மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல இடங்களில் அரசு பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதனால் கடந்த 30ம் தேதி முதல் இம்மாதம் 7ம் தேதி வரை மதுரை-பரமக்குடியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
மதுரையில் இருந்து ராமநாதபுரத்திற்கு மாற்று வழியில் சொற்ப எண்ணிக்கையி்ல் பஸ்கள் இயக்கப்பட்டன. மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் இரவு நேரத்தில் பஸ்கள் நிறுத்தப்பட்டன.
நேற்று மதுரை உள்ளிட்ட நகர் பகுதிகளில் பஸ்கள் இயக்கப்பட்ட போதிலும் பதட்டம் காரணமாக மக்கள் அதிக அளவில் பயணம் செய்யவில்லை. மதுரை டிவிஷனில் மட்டும் கடந்த சில நாட்களாக ரூ.3 கோடி அளவில் இருந்து வருமானம் குறைந்தது. தினமும் 1,100 பஸ்கள் இயக்கப்பட்ட இந்த டிப்போவில் தொடர்ந்து வன்முறை சம்பவங்களால் பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டதாகத் தெரிகிறது.
கடந்த 3 நாட்களாக வருவாய் ரூ.3 கோடியை எட்டவில்லை. இந்த வருவாய் இழப்புகளை வரும் நாட்களில் ஈடுகட்ட அரசு போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி மதுரையிலிருந்து சென்னை, திருப்பூர், கோவை, நெல்லை மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. எனவே இந்த நஷ்டத்தை இன்னும் ஒரு வாரத்தில் ஈடுகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications