நிருபரை 'நாயே' என்று திட்டிய வழக்கு.. கோர்ட்டில் ஆஜராகி ஜாமீன் பெற்றார் விஜயகாந்த்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சமீபத்தில் மதுரை செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்திருந்தார். அப்போது அவரை அணுகிய நிருபர்கள், தேமுதிக எம்.எல்.ஏக்கள் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தது குறித்து கேள்வி கேட்டனர்.
இதனால் கோபமடைந்த விஜயகாந்த், ஜெயா டிவி நிருபர் பாலுவை கடுமையாக திட்டத் தொடங்கினார். நாயே என்றும் போய்யா என்றும், நீயா சம்பளம் தர்றே என்றும், போய் ஜெயலலிதாவைக் கேளு என்றும் கோபமாகப் பேசியவர், அடிப்பதற்கும் கையை ஓங்கி ஓங்கி வந்தார்.
மேலும் தேமுதிக எம்.எல்.ஏவான அனகை முருகேசன் என்பவர் பாலுவை தள்ளி விட்டுத் தாக்கவும் முயன்றார்.
இதையடுத்து பாலு விமான நிலைய போலீஸில் கொடுத்த புகாரின் பேரில் விஜயகாந்த் மீதும், முருகேசன் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குத் தொடரப்பட்டது. இதையடுத்து விஜயகாந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரினார். அவருக்கு முன்ஜாமீனும் கிடைத்தது.
இதையடுத்து தாம்பரம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் இன்று நேரில் ஆஜரான விஜயகாந்த் முன்ஜாமீனைப் பெற்றார்.
முருகேசன் கைது செய்யப்பட்டு தற்போது நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்து போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்துப் போட்டுக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications