இஸ்லாத்தையும், நபிகளையும் இழிவுபடுத்தி படம் எடுத்தவருக்கு ஓராண்டு சிறை
லாஸ் ஏஞ்சல்ஸ்: இஸ்லாம் மதத்தையும், நபிகள் நாயகத்தையும் இழிவுபடுத்தி படம் எடுத்த மார்க் பஸ்ஸலி யூசெபுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இஸ்லாம் மதத்தையும், நபிகள் நாயகத்தையும் இழிவுபடுத்தி 'தி இன்னசன்ஸ் ஆப் முஸ்லிம்ஸ்' என்ற படத்தை எடுத்தவர் அமெரிக்கரான நகோலா பஸ்ஸலி நகோலா(எ) மார்க் பஸ்ஸலி யூசெப்
. இந்த படத்திற்கு உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த படத்தை கண்டித்து லிபியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் நடந்த தாக்குதலில் அந்நாட்டுக்கான அமெரிக்கத் தூதர் உள்பட 4 அதிகாரிகள் பலியாகினர்.
இந்த சர்ச்சைக்குரிய படத்தை தயாரித்த யூசெப் மீது 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கு விசாரணை லாஸ் ஏஞ்சல்ஸ் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த வாரம் நடந்த விசாரணையின்போது யூசெப் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார். அவர் மீதான 8 குற்றச்சாட்டுகளில் 4 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 1 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் 5 ஆண்டுகள் வரை முறையான அனுமதியின்றி கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட்டை பயன்படுத்தக் கூடாது என்று நீதிபதி உத்தரவிட்டார்.
யூசெப் ஏற்கனவே கடந்த 5 வாரமாக அமெரிக்க மத்திய சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications