செக்ஸ் விவகாரம்: அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ.வின் தலைவர் ராஜினாமா

சி.ஐ.ஏவின் தலைவரான டேவிட் பீட்ராயூஸ் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பொறுப்பேற்றார். அதற்கு முன்பு ஆப்கானிஸ்தானில் நேட்டோ படைக்கு இயக்குநராக, ஈராக்கில் அமெரிக்க பாதுகாப்புப் படைக்கு தலைவராக பதவி வகித்தவர். கடந்த புதன்கிழமையன்றுதான் அவருக்கு 60-வது பிறந்தநாள். அதற்கு மறுநாள் அதிபர் ஒபாமாவை நேரில் சந்தித்து தமது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்திருக்கிறார். இதை ஏற்றுக் கொண்ட ஒபாமா நேற்று புதிய சி.ஐ.ஏ. தற்காலிக தலைவராக மொரால் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
ராஜினாமா ஏன்?
அமெரிக்காவின் மிக முக்கிய பிரமுகரான பிட்ராயூஸ் ராஜினாமா பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. அவரைப் பற்றிய புத்தகம் எழுதிய பெளலாவுடன் உறவு வைத்திருந்ததாகவும் இதனை அமெரிக்காவின் விசாரணை அமைப்பான ஃஎப்.பி.ஐ. கண்டுபிடித்ததாகவும் கூறப்படுகிறது.
இதேபோல் திருமணத்துக்கு முந்தைய உடலுறவை நியாயப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. தமது ராஜினாமா தொடர்பான அறிக்கையில், ஒரு நாட்டின் உயர்ந்த பதவியில் இருந்து கொண்டும், நல்ல கணவனாக இருந்தும் கொண்டும் இத்தகையதொரு கருத்தை தெரிவித்ததற்கு வருந்துகிறேன் என்று கூறியுள்ளார்.
குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்படக் கூடிய நபராக இருந்த பிட்ராயூஸின் ராஜினாமா, அமெரிக்க உளவு வட்டாரத்தில் பேரலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. பாலியல் புகாரில் சிக்கிய பிட்ராயூஸ், ரகசியங்களை அம்பலப்படுத்திவிடுவோம் என்று சிலர் மிரட்டியதாலேயே ராஜினாமா செய்தார் என்றும் ஒருதரப்பினர் கூறுகின்றனர்.
ஒசாமா பின்லேடனை சுட்டுக் கொல்வதற்கான திட்டம் வகுத்தவரும் பிட்ராயூஸ்தான். பயங்கரவாதிகள் அமெரிக்காவை குறி வைத்திருக்கும் நிலையில் பிட்ராயூஸின் பதவி விலகியிருப்பது கடும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.
அமெரிக்காவின் அதிபராக ஒபாமா 2-வது முறையாக பதவி ஏற்க இருக்கிறார். இந்த நிலையில் அமெரிக்காவின் அதி முக்கியத்துவமான சி.ஐ.ஏவின் தலைவர் சர்ச்சையில் சிக்கி ராஜினா செய்திருப்பது அவருக்கு மிகப் பெரும் அதிர்ச்சியாகவும் பின்னடைவாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.












Click it and Unblock the Notifications