ஐ.நா 'ரிட்டர்ன்' ஸ்டாலினுக்கு இன்று சென்னையில் பாராட்டு விழா!
சென்னை: ஐநா. சபை மற்றும் ஐ.நா. மனித உரிமை ஆணையத்திற்கும் சென்று சென்னை திரும்பியுள்ள திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பாலு ஆகியோருக்கு இன்று சென்னையில் பாராட்டு விழா நடத்துகிறது திமுக.
சென்னையில் நடந்த டெசோ மாநாட்டின்போது ஈழம் தொடர்பாக பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தத் தீர்மானங்களை நியூயார்க் சென்று ஐ.நா. துணைப் பொதுச் செயலாளரிடம் திமுக பொருளாளர் ஸ்டாலினும், முன்னாள் அமைச்சர் டி.ஆர். பாலுவும் நேரில் அளித்தனர். மேலும் ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளையையும் சந்தித்து அளித்து விளக்கினர்.
இந்த பயணத்தை முடித்து விட்டு இன்று காலை மு.க. ஸ்டாலின், பாலு சென்னை திரும்பினர். அவர்களுக்கு திமுக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. திமுக தலைவர் கருணாநிதியே நேரில் வந்து ஸ்டாலினையும், பாலுவையும் வரவேற்றார்.
அன்பழகன், கனிமொழி உள்ளிட்ட திமுகவினரும் பெருவாரியாக திரண்டு வந்திருந்தனர். தாரை தப்பட்டை முழங்க இருவரையும் விமான நிலையத்திலிருந்து அழைத்து வந்தனர். பின்னர் வெளியே அமைக்கப்பட்டிருந்த மேடையில் நின்றபடி ஸ்டாலின் வரவேற்பை ஏற்றார்.
இந்த நிலையில் இன்று மாலை திமுக சார்பில் இருவருக்கும் பாராட்டு விழா நடத்தவுள்ளனர். மாலை 6 மணிக்கு திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயம் வளாகத்தில் அமைந்துள்ள கலைஞர் அரங்கத்தில் பாராட்டு விழா நடைபெறுகிறது. இதற்கு திமுக தலைவர் கருணாநிதி தலைமை தாங்குகிறார். பொதுச் செயலாளர் அன்பழகன், தி.க. தலைவர் கி.வீரமணி, பேராசிரியர் சுப. வீரபாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன், முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசுகின்றனர்.