தீபாவளி... பஸ்ஸைப் புடி மாப்ளே வெரசா ஊர் போய்ச் சேரனும்!

செவ்வாய்க்கிழமை தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையடுத்து மக்கள் கடைசி நேர பர்ச்சேஸில் தீவிரமாக இறங்கியுள்ளனர். நேற்று சென்னை நகரின் வர்த்தக மையங்களான தி.நகர், புரசைவாக்கம்,பாரிமுனை உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் காணப்பட்டது. லட்சக்கணக்கானோர் குடும்பம் குடும்பமாக, நண்பர்கள் புடை சூழ, உற்றார் உறவினர்களுடன் படையெடுத்து வந்ததால் கடுமையான கூட்டம் காணப்பட்டது.
ரெடிமேட் ஆடைகள் எடுக்க, பல்வேறு வகையான பொருட்களை வாங்க மக்கள் குவிந்து விட்டனர். இதனால் தி.நகர் பக்கம் எட்டிக் கூட பார்க்க முடியவில்லை. அப்படி ஒரு மலைக்க வைக்கும் கூட்டம். சாலையோர கடைகளில்தான் மக்கள் மொய்த்து எடுத்து விட்டனர்.
கூட்டம் காரணமாக பிக்பாகெட் திருடர்கள் கைவரிசை காட்டி விடாமல் இருக்க கண்காணிப்பு கேமராக்கள் மூலம் போலீஸார் தீவிரமாக கண்காணித்தனர். மேலும் பொதுமக்களுக்கு அவ்வப்போது ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தபடியும் இருந்தனர்.
பஸ்ஸில் ஏற 'எமக் கூட்டம்'
இதேபோல சென்னையில் வசிக்கும் வெளியூர்க்காரர்கள் நேற்று தீபாவளிக்காக ஊருக்குக் கிளம்ப பஸ் நிலையங்களை முற்றுகையிட்டதால் பஸ் நிலையங்களிலும் பயங்கரக் கூட்டம்.
குறிப்பாக ரயிலில் இடம் கிடைக்காததால் தென் மாவட்ட மக்கள் ஆயிரக்கணக்கில் பஸ்களை நாடி ஓடி வந்தனர். குடும்பத்துடன் வந்தவர்கள் பாடு படு திண்டாட்டமாக இருந்தது.
சென்னையில் வசிக்கும் வெளிமாவட்ட மக்கள், கடந்த வெள்ளிக்கிழமை இரவில் இருந்தே சொந்த ஊருக்கு செல்ல தொடங்கிவிட்டனர். தீபாவளியை சொந்த ஊரில் கொண்டாட வேண்டும் என்பதற்காக ஆயிரக்கணக்கானோர் பஸ், ரயில்களில் முன்பதிவு செய்தனர். சிறப்பு ரயில், அரசு விரைவு பஸ்களிலும் முன்பதிவு முடிந்து விட்டது. எந்த ரயிலிலும் தற்போது இடம் இல்லாத நிலை.
இதனால் பஸ்ஸை மட்டுமே நம்பி ஊருக்குப் போக வேண்டிய நிலை. இதனால் கோயம்பேடு பஸ் நிலையத்தில் பயங்கர கூட்டம் காணப்படுகிறது. வழக்கமாக செல்லும் பஸ்கள் தவிர சிறப்பு பேருந்துகளும் தற்போது தீபாவளிக்காக இயக்கப்படுகின்றன. ஆனால் எந்த பஸ்ஸிலுமே ஏற முடியாத அளவுக்கு சரியான கூட்டம்.
பஸ்கள் அனைத்தும் தொடர்ச்சியாக கிளம்பி வெளியே வந்ததால் சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் பயங்கரமாக காணப்பட்டது. கிட்டத்தட்ட சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று இரவு பெரும் ஸ்தம்பிப்பு நிலையே காணப்பட்டது.
கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு வரும் சாலைகள் அனைத்திலும் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. 3 வது நாளாக நேற்றும் சென்னை நகரம் போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்தது. இதனால் பயணிகள், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் குறித்த நேரத்தில் குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல முடியாமல் கடும் அவதிக்குள்ளாகினர்.
சென்னை கோயம்பேட்டில் இருந்து நேற்று 543 பஸ்கள் இயக்கப்பட்டன, இன்று 884 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தென் மாநிலங்களுக்கு செல்லும் பயணிகள் நேற்று காலை முதலே கோயம்பேடு மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு வந்தனர். கோயம்பேட்டில் பயணிகள் வரவர தேவைக்கேற்ப பஸ்கள் காலை முதலே இயக்கப்பட்டன.
இன்று வரை சென்னையிலிருந்து6,859 சிறப்பு பஸ்கள் தமிழகம் முழுவதும் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு பஸ்களுக்கு கோயம்பேடு, திருவான்மியூர், திருவொற்றியூர், தாம்பரம் உள்ளிட்ட 20 இடங்களில் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கடந்த 8, 9ம் தேதிகளில் மட்டும் சிறப்பு பஸ்களின் முன்பதிவு மூலம் ரூ. 2.10 கோடி வருவாய் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நாளை தீபாவளி என்பதால் இன்றும் பஸ்களில் கடுமையான கூட்டம் காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications