தரைதட்டிய கப்பல் பொதுமக்களின் ஆராவாரத்துடன் நடுக் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டது!

நிலம் புயல் காரணமாக கடந்த மாதம் 31-ந் தேதி பெசன்ட்நகரில் எண்ணெய் கப்பல் பிரதிபா காவிரி என்ற எண்ணெய் கப்பல் கரை ஒதுங்கி தரை தட்டியது. அன்று இரவு காற்று பலமாக வீசியதால் அந்த கப்பல் மெரினா கடற்பரப்புக்கு இழுத்து வரப்பட்டு தரைதட்டியது.
இதைத் தொடர்ந்து ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இருந்து வரவழைக்கப்பட்ட மால்வியா என்ற இழுவை கப்பல் கயிறு மூலம் எண்ணெய் கப்பலை இழுக்கும் பணியில் ஈடுபட்டது. மீட்பு கப்பலின் இழுவைப் பணியால் நேற்று முன்தினம் பிரதிபா காவேரி கப்பலின் முன்பகுதி சற்று அசைக்கப்பட்டது. இதனிடையே கப்பலில் பழுதான என்ஜின், நங்கூரம், சுக்கான் மற்றும் புரபெல்லர் ஆகியவற்றை நெதர்லாந்து, சிங்கப்பூரில் இருந்து வந்துள்ள பொறியாளர்கள் சரி செய்தனர்.
மால்வியா கப்பல் தன்னுடைய இழுவை பணியை வழக்கம் போல் நேற்று மீண்டும் தொடங்கியது. சென்னை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரத்னா என்ற இழுவை கப்பலும் நேற்று இணைந்து கொண்டது.மால்வியா கப்பல் கயிறு மூலம் பிரதீபா காவேரி கப்பலை இழுத்தது. வேகமாக இழுத்ததால் எண்ணெய் கப்பல் கொஞ்சம் கொஞ்மாக நகர்ந்து சென்றது. நேற்று மாலை 6.20 மணியளவில் கப்பல் நடுக்கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டது.அப்போது கடற்கரையில் பார்வையிட்டுக் கொண்டிருந்த பொதுமக்கள் கைதட்டி பட்டாசுகள் வெடித்தும், மத்தாப்பூ கொளுத்தியும் உற்சாகத்துடன் அந்த கப்பலை வழியனுப்பி வைத்தனர். கப்பல் பொறியாளர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மத்திய கப்பல் துறை மந்திரி ஜி.கே.வாசன் தனியாக ஒரு கப்பலில் நேரடியாக சென்று ஆய்வு செய்தார். தொடர்ந்து நேற்று அதிகாலை 4 மணியிலிருந்து 6.30 மணிவரை அவர் பட்டினப்பாகத்தில் ஆய்வு மேற்கொண்டார். மாலையில் கப்பல் நடுக்கடலுக்குள் இழுத்து செல்லப்பட்ட போதும் ஜி.கே.வாசன் அங்கு இருந்தார்.












Click it and Unblock the Notifications