ஈழத் தமிழர் பிரச்சனைக்காக பொது வாக்கெடுப்பு நடத்துவதில் இந்தியா உறுதியாக இருக்க வேண்டும்: கருணாநிதி

டெசோ மாநாட்டு தீர்மானங்களை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. மன்றத்திலும், ஜெனீவா மனித உரிமை ஆணையத்திலும் வழங்கிவிட்டு சென்னை திரும்பிய தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோருக்கு டெசோ அமைப்பின் சார்பில் வரவேற்பு மற்றும் பாராட்டு கூட்டம் சென்னை கலைஞர் அரங்கத்தில் நேற்று மாலை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கருணாநிதி பேசுகையில்,
மகன் தந்தைக்கு ஆற்ற வேண்டிய நன்றிக்கடன் என்று வள்ளுவர் பெருந்தகை சொல்கின்றார். அத்தகைய உறவுக்கு இன்று வடிவமாக, பொருளாக ஸ்டாலின் திகழ்வது எனக்கு எவ்வளவு பெருமை, எவ்வளவு மகிழ்ச்சி. இதுபற்றி யார் விசமத்தனத்தை பரப்பினாலும் நான் கவலைப்பட மாட்டேன்.
இலங்கை தமிழர்களுக்கு நல்ல வாழ்வு கிடைக்காதா? என்ற ஏக்கத்தோடு ஐ.நா. மன்றத்தில் உள்ளவர்களிடமும், மனித உரிமை கழகத்தினரிடமும் மு.க.ஸ்டாலினும், டி.ஆர்.பாலுவும் மனு கொடுத்துவிட்டு அவர்கள் வெற்றிகரமாக அவர்களுடைய பணிகளை முடித்துவிட்டு வந்துள்ளனர். அவர்கள் முழு வெற்றியை பெற்றிருப்பதாக நான் சொல்லவில்லை. அவர்களுடைய பயணத்தை பொறுத்துவரையில் வெகு தூரம் செல்ல வேண்டியது உள்ளது. அந்த வெற்றியின் உச்சத்திற்கு செல்ல நாம் வெகு தூரம் போக வேண்டியது உள்ளது .
பொது வாக்கெடுப்பில் எத்தனை சிறிய நாடுகள் எல்லாம் விடுதலை பெற்றிருக்கின்றன. இந்த பொது வாக்கெடுப்பை பயன்படுத்தி ஈழத்தமிழர் பிரச்சினையில் தீர்வு காண்பதற்காக ஐ.நா. மன்றத்தை நாம் தயார்படுத்த வேண்டும். அப்படி தயார்படுத்தப்படுவதற்கு நாம் கொடுக்கின்ற அழுத்தம் மட்டும் போதாது. நாம் கொடுக்கின்ற அழுத்தம் என்றால் தமிழ்நாடு கொடுக்கின்ற அழுத்தமாக மாத்திரம் அல்லாமல் இந்தியாவே தருகின்ற அழுத்தமாக அமைய வேண்டும். அப்படி அமைவதற்கு இந்திய அரசும் நமக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். அவர்கள் உறுதுணையாக இருந்தால் தான் நாம் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க முடியும் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications