அடடா, கடலுக்குள்ள போயிருச்சே.. கப்பலை வேடிக்கை பார்க்க வந்தவர்கள் ஏமாற்றம்!
சென்னை: சுனாமியையே தைரியமாக எதிர்த்து நின்று வேடிக்கை பார்க்கத் துணிந்த வீரதீரர்கள் சென்னைவாசிகள்.. அப்படிப்பட்டவர்கள், தங்களுக்கு ரொம்பப் பக்கத்தில் வந்த பிரதீபா காவிரி கப்பலை அப்படியே விட்டு விட முடியுமா.. விழுந்து விழுந்து வேடிக்கை பார்த்த அவர்கள், கப்பலை ஒரு வழியாக மீட்டு கடலுக்குள் கொண்டு சென்று விட்டதால், அதுக்குள்ள போயிருச்சே என்று ஏமாற்றப் பெருமூச்சு விட்டனர்.

அக்டோபர் 31ம் தேதி நிலம் புயல் தமிழகத்தைத் தாக்கியது. மகாபலிபுரம் அருகே கரையைக் கடந்தபோது புயலில் சிக்கி பிரதீபா காவிரி என்ற சரக்குக் கப்பல் புயலில் சிக்கி, பட்டினப்பாக்கம் பகுதியில், தரை தட்டி நின்றது. அதில் இருந்து உயிர் காக்க கீழே குதித்த 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கப்பல் தரை தட்டி நின்றதையடுத்து அந்த இடம் மினி சுற்றுலாத் தலமாக மாறிப் போனது. நூற்றுக்கணக்கான மக்கள் தினசரி அங்கு வந்து கப்பலை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர். இதை வைத்து பலர் மினி கடைகளையும் போட்டு வியாபாரத்தையும் பார்க்க ஆரம்பித்தனர்.
தரை தட்டி நின்ற கப்பலைப் பார்க்க கடற்கரைக்கு சாரை சாரையாக மக்கள் வந்து குவிந்ததால் போலீஸாரும் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர். பலர் கப்பலை வெகு அருகே கண்ட பிரமிப்புடன் திரும்பிச் சென்றனர்.
ஆனால் கப்பல் நேற்று கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு விட்டதால் அதைப் பார்க்க முடியாமல் போனவர்களும், அதைக் காண இன்று கடற்கரைக்கு குடும்பத்தோடு வந்தவர்களும் அடடா, அதுக்குள்ளே தூக்கிட்டுப் போயிட்டாங்களே என்று ஏமாற்றத்துடன் திரும்பியதைப் பார்க்க முடிந்தது.
அதேசமயம், மீனவர்கள் பெரும் நிம்மதியுடன் உள்ளனர். காரணம், கப்பல் நின்றிருந்த இத்தனை நாட்களும் அந்தப் பகுதியை மீனவர்கள் பயன்படுத்த கடலோரக் காவல் படையினர் தடை விதித்திருந்தனர். இதனால் மீன் பிடிக்க அந்தப் பகுதிக்குப் போக முடியாமல் இருந்தது. தற்போது தடை நீங்கியிருப்பதால் அவர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications