மின்வெட்டு: நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்- ஸ்டாலின்
திருச்சி: சமீபத்தில் திருச்சியில் மரணமடைந்த மறைந்த அன்பில் பொய்யாமொழியின் தம்பி ராஜேந்திரன் குடும்பத்தினரை சந்தித்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும், ஜாமீனில் விடுதலையாகி திருச்சியில் நிபந்தனை ஜாமீனில் தங்கியுள்ள முன்னாள் அமைச்சர் பொன்முடியையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.
மறைந்த அன்பில் பொய்யாமொழி ஸ்டாலினின் வலதுகரமாக திகழ்ந்தவர். அவரது தம்பி அன்பில் ராஜேந்திரன். இவர் சமீபத்தில் மரணமடைந்தார். இதையடுத்து திருச்சி வந்த ஸ்டாலின் ராஜேந்திரன் குடும்பத்தினறை சந்தித்து ஆறுதல் கூறினார்.
அதன் பின்னர் வழக்கில் கைதாகி ஜாமீனில் விடுதலையாகி, திருச்சியில் தங்கி கையெழுத்துப் போட்டு வரும் முன்னாள் அமைச்சர் பொன்முடியையும் ஸ்டாலின் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தற்போது தமிழகத்தில் ஜாதி மோதல்கள் அதிகரித்து வருவதோடு, சட்டம்- ஒழுங்கும் கெட்டு விட்டது. தென்மாவட்ட கலவரங்களை ஒடுக்க முன்கூட்டியே நடவடிக்கை எடுத்திருந்தால் தடுத்திருக்கலாம்.
திமுக ஆட்சியில் 2 மணி நேரம் மின்தடை இருந்ததற்கு மக்கள் கோபம் அடைந்தனர். ஆனால் தற்போது 18 முதல் 20 மணி நேரம் வரை மின்தடை நிலவுகிறது. மின்வெட்டு, ஜாதிக் கலவரம் காரணமாக அதிமுக அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இது வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும். அதிமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். அதிமுகவை தோற்கடிப்பார்கள். திமுக நிச்சயம் அமோக வெற்றியைப் பெறும் என்றார்.












Click it and Unblock the Notifications