புதுவையில் டூ மும்பைக்கு பெங்களூர் வழியாக புதிய ரயில்: டிசம்பர் 6 முதல்...
புதுச்சேரி: புதுச்சேரியில் இருந்து மும்பைக்கு பெங்களூர், பூனே வழியாக புதிய ரயில் இயக்கப்படும் என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இந்த புதிய ரயில் சேவை தொடக்க விழா வரும் 6ம் தேதி மாலை புதுச்சேரி ரயில் நிலையத்தில் நடைபெறுகிறது.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
இந்த ஆண்டு ரயில்வே நிதிநிலை அறிக்கையில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் எங்களுடைய வேண்டுகோளை ஏற்று புதுச்சேரியில் இருந்து மும்பைக்கு பெங்களூர், பூனே வழியாக வாரம் 3 முறை ரயில் இயக்குவதற்கு ஒப்புதல் அளித்தார். இந்த ரயிலின் தொடக்க விழா வருகிற 6ம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த ரயில் வாரத்தில் 3 நாட்கள் மும்பையில் இருந்து புதுச்சேரிக்கு வந்து செல்லும்.
புதுச்சேரியில் இருந்து ஒவ்வொரு வாரமும் ஞாயிறு, செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் இரவு 8.15 மணிக்கு புறப்பட்டு செவ்வாய், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் காலை 8.05 மணிக்கு மும்பைக்கு சென்று சேரும். அதே போல் மும்பை தாதரில் வெள்ளி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு ஞாயிறு, செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் காலை 8.05 மணிக்கு புதுச்சேரியை வந்து சேரும்.
இதன் மூலம் புதுச்சேரி, தமிழகம், கர்நாடகா மற்றும் மகராஷ்டிரா பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், வியாபாரிகள் பெரும் பயனடைவார்கள். மேலும் புதுச்சேரியில் இருந்து அகமதாபாத் செல்லும் பயணிகள் தாதர் வரை சென்று அங்கிருந்து செல்ல வாய்ப்பு உள்ளது. இது மட்டுமல்லாமல் காரைக்காலில் இருந்து முதல் முறையாக சென்னை, கொச்சி, திருச்சி, நாகூர் ஆகிய பகுதிகளுக்கு ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
எங்கள் கோரிக்கையை ஏற்று இந்த ரயில் சேவையை தொடங்க உதவிய பிரதமர் மன்மோகன்சிங், அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தொடர்ந்து புதுவை மாநிலத்திற்கு நிறைய ரயில் விடுவதற்கு நானும், கண்ணன் எம்.பியும் சேர்ந்து முயற்சிகள் எடுப்போம்.
இந்த ரெயில் சேவையில் தொடக்க விழா வருகிற 6ம் தேதி மாலை 4 மணிக்கு புதுச்சேரி ரயில் நிலையத்தில் நடைபெற உள்ளது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications