காதல் திருமணத்தால் ஏற்பட்ட மோதல் அல்ல தர்மபுரி சம்பவம்! - ராமதாஸ் 'கண்டுபிடிப்பு'
சென்னை: தர்மபுரி மாவட்ட கிராமங்களில் நடந்த மோதல்கள் காதல் திருமணம் காரணமாக நிகழ்ந்தவை அல்ல என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
தர்மபுரி மாவட்டத்தில் 3 கிராமங்களில் நடந்த நிகழ்வுகள் வருந்ததக்கது. இது போன்ற சம்பவங்கள் நடக்க கூடாது என்று தான் 32 ஆண்டாக போராடி வருகிறேன். இந்த சூழ் நிலையில் இச்சம்பவம் வேதனை அளிக்கிறது.
அதே நேரத்தில் இந்த சம்பவத்துக்கு பா.ம.க.வினரும், வன்னியர் சங்கத்தினரும் தான் காரணம் என்று திருமாவளவன் கூறியிருப்பது அபத்தமானது. இது போன்ற பொய் பிரசாரத்தை பலர் செய்து வருகிறார்கள்.
தர்மபுரியில் நடந்தது இரு சமூகங்களுக்கு இடையேயான மோதலோ, இரு கட்சிகளுக்கு இடையேயான மோதலோ அல்ல. அந்த பகுதியில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்களிடையே முன் விரோதம் இருந்து வருகிறது. அண்மையில் நடந்த காதல் திருமணத்தில் அந்த பெண்ணின் தந்தை நாகராஜ் பல்வேறு தரப்பினரால் திட்டமிட்டு அவமானப்படுத்தப்பட்டுள்ளார்.
தலித் சமுதாய சப்-இன்ஸ்பெக்டர் திட்டமிட்டு அவரை தற்கொலை செய்யும் அளவுக்கு அவமானப்படுத்தியிருக்கிறார். இதன் விளைவாகவே நாகராஜ் தற்கொலை செய்துள்ளார். ஏற்கனவே அந்த பகுதியில் முன் பகையும் இருந்ததால் நாகராஜ் இறந்ததும் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்கள் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்கள். இதை வன்னியர், தலித் மோதல் என்று சித்திரிப்பது தவறானது.
இந்த மோதலில் குற்றம் சாட்டப்பட்டு இருப்பவர்களில் நாயுடுகள், செட்டியார்கள், இசை வேளாளர்கள், வன்னியர்கள், குரும்பர்கள் என்று எல்லா சமூகத்தினரும் இருக்கிறார்கள். மேலும், இது திருமாவளவன் கூறுவது போல் பா.ம.க. தலித் இடையேயான மோதலும் அல்ல. ஏனென்றால் இறந்து போன நாகராஜ் தே.மு.தி.க.வை சேர்ந்தவர்.
கைது செய்யப்பட்டிருப்பவர்களும் மற்ற கட்சிகளை சேர்ந்தவர்கள்தான். காதல் திருமணம் வேண்டாம் என நான் சொல்வதில்லை. ஆனால், காதல் திருமணம் என்ற பெயரில் பின் தங்கிய, மிகவும் பின் தங்கிய, முன்னேறிய வகுப்புகளை சேர்ந்த பெண்களை பாதிப்புக்குள்ளாக்கி வருகிறார்கள்.
காதல் நாடகம் நடத்தி கடலூர் மாவட்டத்தில் மட்டும் 2000 பெண்களை பாதிப்புக் குள்காக்கி இருக்கிறார்கள். காதல் நாடகம் நடத்தி பணம் பறிக்கிறார்கள். இதுதான் மோதலுக்கு காரணம். இது பற்றி விரிவான விசாரணை நடத்த வேண்டும்.
சிறு, சிறு பிரச்சினைகளுக்கும், மற்ற சாதியினர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தை பயன்படுத்துகிறார்கள். இதுவும் மோதலுக்கு காரணம். தலித் மக்கள் வாழும் பகுதி வழியாக செல்லும் பிற சமுதாய பெண்கள், மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லை. இதனால் பல மாணவிகளின் படிப்பு பாதியிலேயே தடைப்பட்டுள்ளது.
இந்த மோதலுக்கு முக்கிய காரணம் தலித்துகளுக்கும், இதர சமூகத்தினருக்கும் இடையே இருந்து வரும் முன்பகை தான். இதை அகற்ற சமூக அமைப்புகளும், அரசும் முன்வர வேண்டும்.
தர்மபுரி சம்பவத்தை காரணமாக வைத்து வன்னியர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அந்த மாவட்ட திட்ட அதிகாரியும், வருவாய் அதிகாரியும், தூண்டி விடுகிறார்கள். உடனடியாக அவர்களை இடமாற்றம் செய்ய வேண்டும். அரசும், அரசியல் கட்சிகளும் நடுநிலையுடன் செயல் பட வேண்டும். தலித் வீடுகள் தாக்கப்பட்டது வருந்ததக்கது தான்.
அதே நேரத்தில் நாகராஜ் அவமானப்படுத்தப்பட்டு தற்கொலை செய்ததும் மிகப் பெரிய இழப்பு. அந்த குடும்பத்துக்கு இழப்பீடும் வழங்கவில்லை. ஆறுதலும் சொல்லவில்லை. ஒரு தரப்பினருக்கும் மட்டும் ஆட்சியாளர்கள் சாதகமாக இருப்பது ஏன்ப இந்த கலவரம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேர்மையாக விசாரணை நடத்தினாலும், சி.பி.ஐ. விசாரணை நடத்தினாலும் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது, குரு எம்.எல்.ஏ., ஏ.கே.மூர்த்தி, பா.ம.க. துணை தலைவர்கள் கே.என். சேகர், டாக்டர் செந்தில், மாவட்ட அமைப்பாளர் ஜெயராமன், வி.ஜே. பாண்டியன், கன்னியப்பன், வெங்கடேசன், ஜமுனா கேசவன் ஆகியோர் உடன் இருந்தனர்.












Click it and Unblock the Notifications