ஐ.மு. கூட்டணி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்: மமதா உறுதி

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதித்தது, பெட்ரோல் விலை உயர்வு உட்பட மத்திய அரசின் முடிவுகளை எதிர்த்து சில மாதங்களுக்குமுன், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிலிருந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெளியேறியது. இதனால் மைனாரிட்டி அரசாக மாறியது மத்திய அரசு.
இதன்பின் டெல்லியில், மத்திய அரசுக்கு எதிராக பெரிய போராட்டத்தை நடத்திய மம்தா பானர்ஜி, நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரில் அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என, அறிவித்தார். இந்நிலையில், கொல்காத்தாவில் தனது கட்சியின் எம்.பிக்களுடன் நேற்று ஆலோசனை நடத்தியபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மமதா. நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளில மத்திய அரசுக்கு எதிராக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சுதீப் பந்தோபாத்யாய், நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வருவார்.
சில்லறை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீடு, சமையல் காஸ் சிலிண்டர்கள் வினியோகத்தில் கட்டுப்பாடு என அடுத்தடுத்து மக்களுக்கு விரோதமான முடிவுகளை மத்திய அரசு எடுத்துள்ளது. எனவே மத்திய அரசை தூக்கி எறியவும் பொதுத் தேர்தல் மூலமாக புதிய அரசை கொண்டு வரவும் இந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.
எதிர்கட்சியான பா.ஜ. க உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளுடனும் பேசுவதற்கு நாங்கள் தயார். ஆளும்.கூட்டணியில் இடம் பெற்றுள்ள தி.மு.க.வும் எங்கள் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டுகிறோம். இதேபோல் சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியினரும் எங்கள் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும். இடதுசாரி கட்சிகளும் எங்கள் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்றார் அவர்.
மமதாவின் அழைப்பினை ஏற்று எத்தனை கட்சிகள் அவருக்கு ஆதரவளிப்பார்கள் என்பது குளிர்காலத் கூட்டத்தொடரின் போது தெரியவரும். அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானம் வெற்றி அடையுமா? அல்லது 2014 ம் ஆண்டு வரை ஆட்சி தொடருமா என்பது இன்னும் சில நாட்களில்தெரியவரும்.












Click it and Unblock the Notifications