மதுரை அருகே டெங்கு காய்ச்சலுக்கு ஒரே நாளில் 6 பேர் பலி: மக்கள் சாலை மறியல்
மேலூர்: மதுரை மாவட்டம் மேலூர் அருகே டெங்கு காய்ச்சலுக்கு ஒரே நாளில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அச்சமடைந்துள்ள கிராம மக்கள் மருத்துவமனையில் தங்களுக்கு சரியான சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
டெங்கு காய்ச்சல் குறித்த அச்சம் தமிழ்நாடு முழுவதும் பரவலாக இருந்து வரும் நிலையில் மதுரை மாவட்டம் மேலூர் சுற்றுவட்டார கிராம மக்கள் டெங்கு காய்ச்சலாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது வரை டெங்கு காய்ச்சலுக்கு 40 பேர் வரை உயிரிழந்துள்ள நிலையில் இன்று ஒரே நாளில் 6 பேர் டெங்கு காய்ச்சலுக்கு மரணமடைந்துள்ளதால் கிராம மக்களிடையே அச்சம் அதிகரித்துள்ளது.
கடந்த சில நாட்களாக காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வந்த சொக்கம்பட்டியை சேர்ந்த சுதாகர் மகன் கார்த்திகேயன்(6), தலையூர்பட்டியை சேர்ந்த இளங்கோவன் மகன் பரத்(11), உடையாம்பட்டியை சேர்ந்த போஸ் என்பவரது மனைவி விஜயா(28), புதுசொக்கம்பட்டியை சேர்ந்த பாண்டி என்பவரது மனைவி பாமா(35), சென்னகரம்பட்டியை சேர்ந்த வேலு என்பவரது மகன் வேலுமணி(23) ஆகியோர் இன்று அதிகாலை மரணமடைந்தனர். பரவையை சேர்ந்த வாசுகி என்ற கல்லூரி மாணவியும் டெங்கு காய்ச்சலுக்கு இன்று உயிரிழந்தார்.
மக்கள் சாலைமறியல்
ஒரே நாளில் 6 நாளில் 6பேர் உயிரிழந்துள்ளதால் அச்சமடைந்துள்ள கிராம மக்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது பேசிய அவர்கள் மருத்துவமனையில் டாக்டர்களும், நர்ஸ்களும் தங்களுக்கு உரிய சிகிச்சை அளிக்காமல் தங்களை அலட்சியம் செய்ததாக தெரிவித்தனர். கிராம சுகாதார நிலையங்களில் சரியான சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என்று குற்றம்சாட்டிய அவர்கள் இதன் காரணமாகவே பலரும் உயிரிழக்க நேரிடுகிறது என்று கூறினர்.












Click it and Unblock the Notifications