பெற்ற குழந்தை 100 ரூபாய்க்கு விற்பனை: இரு பெண்கள் கைது
சென்னை: சென்னையில் பிறந்து 16 நாட்களே ஆன குழந்தையை நூறு ரூபாய்க்கு விற்ற பெண்ணையும், குழந்தையை வாங்கி பிச்சையெடுத்த பெண்ணையும் போலீசார் கைது செய்தனர்.
மணலி எம்ஜிஆர் நகரை சேர்ந்த ரங்கநாதன் மனைவி செல்வி. இவரது கணவர் கடந்த ஒரு வருடத்துக்கு முன் இறந்துவிட்டார். 13 வயதில் ஒரு மகள் உள்ளார். கணவர் இறந்தபின் செல்வி, சித்தாள் வேலை செய்துள்ளார். அப்போது சிதம்பரம் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டு செல்வி கர்ப்பமானார். கடந்த மாதம் 29ம் தேதி மணலி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செல்விக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் குழந்தையுடன் சேர்க்கப்பட்டார்.
அப்போது அருகில் உள்ள படுக்கையில் சிகிச்சை பெற்று வந்தவருக்கு துணையாக இருந்த முனியம்மா உடன் செல்விக்கு நட்பு ஏற்பட்டது. முனியம்மாவிடம் பேசிய செல்வி தனது கணவர் இறந்த செய்தியையும், வேறொருவருடன் ஏற்பட்ட தொடர்பால் குழந்தை பிறந்ததையும் கூறி புலம்பியுள்ளார்.
இதனைக் கேட்ட முனியம்மா, செல்வியிடம் 100 ரூபாயை செலவுக்கு வைத்து கொள் என கூறிவிட்டு கடந்த 12ம் தேதி குழந்தையை வாங்கினார். பின்னர் அந்த குழந்தையை காட்டி பிச்சை எடுத்துள்ளார்.
சனிக்கிழமை இரவு கோயம்பேடு பஸ் நிலையத்தில் குழந்தையை வைத்து முனியம்மா பிச்சையெடுத்து கொண்டிருப்பதை அறிந்த கோயம்பேடு இன்ஸ்பெக்டர் ஷான் வின்சென்ட், அவரை பிடித்து விசாரித்தார்.
இதில் செல்வியிடம் குழந்தையை வாங்கியதை ஒப்புக்கொண்டார். குழந்தையை வேறோருவருக்கு விற்றதற்காக செல்வியையும், பிச்சையெடுக்க பயன்படுத்தியதற்காக முனியம்மாவையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். குழந்தையை மீட்டு செனாய் நகரில் உள்ள சைல்டு லைனில் போலீசார் ஒப்படைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications