நம்பிக்கையில்லா தீர்மானம், குஜராத் தேர்தலை எதிர்கொள்ளும் நேரத்தில் கசாபை தூக்கிலிட்ட மத்திய அரசு!
மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி விவகாரத்தில் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படலாம் என்பதால், இந்தக் கூட்டத் தொடர் சுமூகமாக நடைபெறுமா என்பதே பெரும் சந்தேகமாகியுள்ளது.
இந்தக் கூட்டத் தொடரில் நிலுவையில் உள்ள 25 மசோதாக்களை நிறைவேற்றவும், புதிதாக 10 மசோதாக்களை நிறைவேற்றவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
ஆனால், எதிர்க்கட்சிகள் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு விவகாரம், நிலக்கரி சுரங்க ஊழல் ஆகிய விவகாரங்களைக் கிளப்பத் தயாராகி வருகின்றனர்.
மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் அதை முறியடிக்க காங்கிரஸ் தலைவர்களும் திட்டம் தீட்டி வருகின்றனர்.
இந் நிலையில் தான், நாடாளுமன்றம் கூடும் நேரமாகப் பார்த்து மும்பை தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதி கசாப் தூக்கில் போடப்பட்டுள்ளான். நாளை நாடாளுமன்றம் கூட உள்ள நிலையில் இவன் தூக்கில் போடப்பட்டது பல கேள்விகளை எழுப்புகிறது.
இதை வைத்துக் கொண்டு தனக்கு எதிராக எதிர்க் கட்சிகள் முன் வைக்கும் விவகாரங்களை காங்கிரஸ் தவிடுபொடியாக்க திட்டமிடுவதாகத் தெரிகிறது.
குறிப்பாக இந்த நேரத்தில் தனக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டால், அதற்கு நாடு முழுவதும் மக்களிடம் கடும் எதிர்ப்பு எழும் என்று மத்திய அரசு கருதுவதாகத் தெரிகிறது.
தீவிரவாதியை தூக்கில் போட்ட மத்திய அரசுக்கு எதிராகவா நம்பிக்கையில்லாத் தீர்மானம் என்று பிரச்சனையை காங்கிரஸ் திசை திருப்ப நிறைய வாய்ப்புகள் உள்ளன. மேலும் ஒருவேளை நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரிக்க பெரும்பாலான கட்சிகள் முன்வந்து ஆட்சியே பறிபோனால் கூட, ஓட்டு வேட்டைக்கு கசாப் தங்களுக்கு உதவுவான் என காங்கிரஸ் நம்புவதாகத் தெரிகிறது.
மேலும் விரைவில் நடக்கவுள்ள குஜராத் சட்டமன்றத் தேர்தலையும் மனதில் வைத்தே கசாப் இந்த நேரத்தில் தூக்கில் போடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. குஜராத்தில் முதல்வர் நரேந்திர மோடியை சமாளிக்க எதைச் சொல்லிப் பிரச்சாரம் செய்வது என்றே தெரியாமல் தவித்து வரும் காங்கிரசுக்கு இப்போது கசாப் கொஞ்சம் கை கொடுக்கலாம்.
குஜராத்தில் இன்றே இதைச் சொல்லி காங்கிரசார் ஓட்டு கேட்க ஆரம்பித்துவிட்டதும் குறிப்பிடத்தக்கது.
தேர்தலுக்கு தயாராகிவிட்ட காங்கிரஸ்.. ஐ.பி முன்னாள் தலைவர் ராமன்:
மேலும் முன்னாள் இன்டெலிஜென்ஸ் பீரோ தலைவரான பி.ராமன் தனது டிவிட்டரில் தொடர்ந்து சில தகவல்களை கொட்டி வருகிறார். அவையும் சில முக்கிய சந்தேகங்களை கிளம்புகின்றன.
அவரது ட்வீட்களில் சில,
அப்துல் கசாபை புனேவுக்கு கொண்டு சென்றுள்ளனர் என்ற தகவலை நான் பார்த்ததில் இருந்தே எனக்கு சில சந்தேகங்கள் எழுந்தன. கசாபை தூக்கில் போட்டுவிட்டு, விரைல் தேர்தலை சந்திக்க மத்திய அரசு தயாராகலாம்.
கசாபை விவகாரத்தையே காரணமாக வைத்து குஜராத் தேர்தலைக் கூட மத்திய அரசு ஒத்தி வைக்கலாம்.
ராகுல் காந்தியை நாடாளுமன்றத் தேர்தல் கமிட்டிக்கான தலைவராக காங்கிரஸ் நியமித்த போதே கசாபின் கதைக்கும் சேர்த்தே காங்கிரஸ் திட்டம் போட்டு விட்டதாகவே தெரிகிறது.
தேர்தலுக்கு காங்கிரஸ் தயாராகிவிட்டது. பாஜக நன்றாக தூங்கிக் கொண்டுள்ளது.
கடந்த ஒரு வாரமாக வேக வேகமாக நிகழ்வுகள் நடந்து கொண்டுள்ளன. ஆனால், இந்துத்துவா கும்பகர்ணனின் (பாஜக) தூக்கம் கலையே இல்லை.
இவ்வாறு உயர் மட்ட விவகாரங்களை நன்றாகத் தெரிந்த ராமன் போட்டுத் தாக்கி வருகிறார்.