2ஜி நஷ்ட கணக்கு: சிஏஜி-பாஜக தொடர்புகள் அம்பலமாகிவிட்டன- சோனியா

2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனையால் நாட்டுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக சிஏஜி வினோத் ராய் கூறிய தகவல்கள் முழுக்க முழுக்க அவரது சொந்த கணக்கு என்பதும், இதில் பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷியின் பங்கு உள்ளதையும் மத்திய கணக்குத் தணிக்கை அலுவலகத்தில் பணியாற்றிய டைரக்டர் ஜெனராலான ஆர்.பி.சிங் சுட்டிக் காட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இந் நிலையில் இன்று காங்கிரஸ் மத்தியக் குழுக் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம் பேசிய சோனியா காந்தி, இந்த விவகாரத்தில் பாஜகவின் சாயம் வெளுத்துவிட்டது என்றார்.
இது குறித்து கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கமல் நாத், ஆர்.பி. சிங் கூறியுள்ள கருத்துக்கள் மிகவும் சீரியசானவை. சிஏஜி வினோத் ராய், முரளி மனோகர் ஜோஷியின் செயல்கள் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட வேண்டும். இது குறித்து நாடாளுமன்றத்தில் நிச்சயம் விவாதிப்போம் என்றார்.
அதே போல காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரும் அமைச்சருமான மணீஷ் திவாரி கூறுகையில், ஜோஷி மீதும் சிஏஜி மீதும் ஆர்.பி. சிங் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் மிக மிகத் தீவிரமானவை. இதற்கு முரளி மனோகர் ஜோஷி என்ன பதில் சொல்லப் போகிறார் என்றார்.
காங்கிரஸ் மூத்த எம்பி பி.எல்.புனியா கூறுகையில், அரசியல் ஆதாயத்துக்காக பாஜக எந்த அளவுக்கும் போகும் என்பதைத் தான் இந்த விவகாரம் உறுதிப்படுத்தியுள்ளது. அரசியல் சட்டத்துக்கு உட்பட்ட சிஏஜி அலுவலகத்தையே தங்களது அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்தியுள்ளனர். மேலும் சிஏஜி அலுவலக அதிகாரிகளை நெருக்கடிக்கு ஆளாக்கி, வேண்டியதை சாதித்துள்ளனர். இது குறித்து ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு விசாரிக்க வேண்டும். முழு உண்மையும் வெளியே கொண்டு வரப்பட வேண்டும் என்றார்.
இடதுசாரிகளும் கடும் தாக்கு:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான டி.ராஜா கூறுகையில், சிஏஜியின் அறிக்கையையே திரிக்கும் அளவுக்கு முரளி மனோகர் ஜோஷியின் செயல்பாடுகள் இருந்தன என்பது அதிர்ச்சிக்குரியதாக உள்ளது. இதற்கு அவர் நிச்சயம் பதில் சொல்லிவே ஆக வேண்டும் என்றார்..












Click it and Unblock the Notifications