தர்மபுரி ஜாதி வெறிக் கலவரத்திற்குக் காரணமான காதல் மணம் புரிந்த பெண் கோர்ட்டில் ஆஜர்
தர்மபுரி: தர்மபுரியில் ஜாதி வெறிக் கலவரம் ஏற்பட்ட மூலகாரணமாக இருந்ததாக கூறப்படும் காதல் மணம் புரிந்த பெண் திவ்யா தர்மபுரி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
தர்மபுரியை அடுத்த செல்லன்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜின் மகள் திவ்யா. இவர் வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்தவர். இவரும் நத்தம் காலனியைச் சேர்ந்த இளங்கோ என்பவரின் மகன் இளவரசனும் காதல் திருமணம் செய்ததாகக் கூறி, சேலம் டிஐஜி சஞ்சய்குமாரிடம் கடந்த அக்டோபர் 15ஆம் தேதி தஞ்சம் அடைந்தனர்.
இதையடுத்து, உரிய பாதுகாப்பு வழங்குமாறு தர்மபுரி மாவட்ட காவல்துறையினருக்கு டிஐஜி உத்தரவிட்டார். இந்த நிலையில், பெண்ணின் தந்தை நாகராஜ், நவம்பர் 7ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இதைத் தொடர்ந்து இரு கிராமங்களிலும் ஜாதி வெறியாட்டம் தொடங்கியது. பெரும் வன்முறை வெடித்தது. தலித் மக்கள் வாழும் நத்தம் காலணி கிராமத்திற்குள் புகுந்து வன்னிய மக்கள் பெரும் வன்முறையில் ஈடுபட்டனர்.
இதில் 3 கிராமங்கள் ஒட்டுமொத்தமாக சூறையாடபட்டன, குடிசைகள் தீக்கிரையக்கப்பட்டன, பொருட்கள், நகைகள் திருடப்பட்டன. மிகப் பெரும் பரபரப்பை இந்த ஜாதி வெறிக் கலவரம் ஏற்படுத்தி விட்டது.
இந்த நிலையில், பெண்ணின் தாய் தேன்மொழி, கடந்த செவ்வாய்க்கிழமை வக்கீல்களுடன் தர்மபுரி எஸ்.பியை சந்தித்து ஒரு புகார் கொடுத்தார். அதில், தனது மகளை கடத்திச் சென்றிருப்பதாகவும், திருமண வயது வராத நபருக்கு திருமணம் செய்து வைத்திருப்பதாகவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் திவ்யா, கிருஷ்ணாபுரம் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை ஆஜரானார். அப்போது, தன்னை யாரும் கடத்தவில்லை என்றும் தானாகவே விரும்பிச் சென்றதாகவும் கூறி வாக்குமூலம் அளித்தார். ஆனால் இந்த விவகாரம் பெரும் ஜாதிக் கலவரத்திற்கு வித்திட்டு விட்டதால் கோர்ட்டில் ஆஜராகி வாக்குமூலம் தருமாறு காவல் நிலையத்தில் அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து போலீஸார் திவ்யாவை பலத்த பாதுகாப்புடன், தர்மபுரி 2வது குற்றவியல் கோர்ட்டில் நேற்று மாலை ஆஜர்படுத்தினர்.
அப்போது நீதிபதி முன்பு ஆஜரான திவ்யா, தன்னை யாரும் கடத்தவில்லை எனவும், தானே விரும்பிச் சென்றதாகவும் கூறினார். இதையடுத்து, சேலம் பெண்கள் காப்பகத்தில் திவ்யாவை வியாழக்கிழமை வைத்திருக்கவும், வெள்ளிக்கிழமை காலை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி கே. ஜோதி உத்தரவிட்டார்.
இதையடுத்து காப்பகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டார் திவ்யா. இன்று அவரை மீண்டும் கோர்ட்டில் போலீஸார் ஆஜர்படுத்துகின்றனர்.












Click it and Unblock the Notifications