விடுதலை கோரி பூந்தமல்லி சிறப்பு முகாமில் பரமேஸ்வரன் உண்ணாவிரதம்

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு பொருள் கடத்த முயன்றார் என்ற குற்றச்சாட்டில் சென்னையில் 2008ம் ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார் பரமேஸ்வரன். பின்னர் இவரை நீதிமன்றம் 2008ம் ஆண்டு அக்டோபர் 22ம் தேதி ஜாமீனில் விடுதலை செய்தது. ஆனால் சிறையிலிருந்து விடுதலையான அவரை சிறை வாசலிலேயே வைத்து கியூ பிரிவு போலீஸார் கைது செய்து செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைத்தனர்.
இதே வழக்கில் இவருடன் 10 பேர் கைது செய்யப்பட்டு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டனர். ஆனால் பரமேஸ்வரனைத் தவிர மற்ற அனைவரும் விடுவிக்கப்பட்டு விட்டனர். அதனால் இவர் உட்பட மேலும் பலர் தங்களை விடுதலை செய்யக்கோரி செங்கல்பட்டு முகாமில் உண்ணாவிரதம் தொடங்கினர்.
இந்த நிலையில் கடந்த 2010ம் ஆண்டு உண்ணாவிரதம் இருந்த பரமேஸ்வரன் உள்பட 15 பேரை போலீஸாரைத் தாக்க முயன்றதாக வழக்குப் பதிவு செய்து வேலூர் சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட 43 நாளில் இந்த வழக்கிலிருந்தும் ஜாமீன் கிடைத்து வெளியில் வந்தார் பரமேஸ்வரன். ஆனால் மறுபடியும் இவர் கைது செய்யபப்பட்டு பூந்தமல்லி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டார்.
பூந்தமல்லி சிறப்பு முகாமில் இருந்த பரமேஸ்வரன் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில், போலீசாரை தாக்கியதாக இவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கிலிருந்து கடந்த பிப்ரவரி மாதம் 15ம் தேதி கோர்ட்டால் விடுதலை செய்யப்பட்டார் பரமேஸ்வரன்.
இருப்பினும் அவரை மீண்டும் போலீஸார் கைது செய்து தொடர்ந்து முகாமிலேயே அடைத்து வைத்துள்ளனர். 27.04.2012 அன்று இலங்கைக்கு பொருட்கள் கடத்திய வழக்கில் இவர் குற்றவாளி இல்லை என்று நீதிமன்றம் விடுதலை செய்தது. ஆனால் இவர் இன்று வரை விடுவிக்கப்படவில்லை.
இந்த நிலையில், சட்டவிரோதமாக தன்னை அடைத்து வைத்திருப்பதை எதிர்த்து தன்னை விடுவிக்ககோரி பரமேஸ்வரன் இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கி இருக்கிறார். தனது போராட்டத்தை தமிழாதரவு கட்சிகளும், இயக்கங்களும், மனித உரிமை ஆர்வலர்களும், தமிழ் உணர்வாளர்களும் ஆதரிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார் பரமேஸ்வரன்.












Click it and Unblock the Notifications