அன்பு, அமைதியைப் பரப்புவதில் இந்தியா முதன்மையான நாடு: தலாய்லாமா பாராட்டு
திருவனந்தபுரம்: உலக நாடுகளின் மத்தியில் சகோதரத்துவம், அன்பு, அமைதி ஆகியவற்றை பரப்புவதில் இந்தியா முதன்மை நாடாக திகழ்கிறது என்று திபெத்திய மத குரு தலாய் லாமா தெரிவி்ததுள்ளார்.
திருவனந்தபுரம் அருகே உள்ள சிவகிரியில் நாராயணகுருவின் தலைமை ஆசிரமம் உள்ளது. இங்கு நாராயணகுருவின் சமாதி அமைந்துள்ளது. இந்த ஆசிரமத்திற்கு கேரளாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமானோர் வருகின்றனர். சிவகரி நாராயணகுரு ஆசிரமத்தில் வருடம் தோறும் புனித பயணம் நடைபெறும். இவ்வருட புனித பயணம் வரும் டிசம்பர் மாதம் 30, 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய தேதிகளில் நடக்கிறது.
இதன் முன்னோடியாக சிவகிரி ஆசிரமத்தில் நேற்று ஆன்மீக மாநாடு நடந்தது. இதை திபெத் புத்த மத தலைவர் தலாய்லாமா தொடங்கி வைத்து பேசியதாவது,
தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றத்துக்கு நாராயணகுரு ஏராளமான தொண்டு செய்தார். அவருடைய கருத்துப்படி நடந்தால் உலகில் எந்த பிரச்சனையும் ஏற்படாது. நாராயணகுருவின் கொள்கைகள் உலகம் முழுவதும் பரவ வேண்டும். இந்தியா மதசார்ப்பற்ற நாடு. இந்தியாவின் மதசார்ப்பற்ற கொள்கைகள் உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக திகழ்கிறது. உலக நாடுகளின் மத்தியில் சகோதரத்துவம், அன்பு, அமைதி ஆகியவற்றை பரப்புவதில் இந்தியா முதன்மை நாடாக திகழ்கிறது.
இந்த நூற்றாண்டு தீவிரவாதம் மற்றும் அநீதியின் நூற்றாண்டாக உள்ளது. ஆனால் அமைதியின் நூற்றாண்டு தான் உலகிற்கு அவசியம். அதற்காக அனைவரும் ஒன்றாக செயல்பட வேண்டும். உள்நாட்டு கலவரத்தால் ஏராளமானோர் உயிர் இழந்துள்ளனர். இதுபோன்ற மோசமான சம்பவங்கள் மனித குலத்தி்ற்கு நல்லதல்ல. தீவிரவாதத்தை ஒடுக்குவதற்காக ஐ.நா. சபை தீர்மானம் மட்டும் நிறைவேற்றினால் எந்த பிரச்சனையும் தீராது என்றார்.