மழைக்கால தொடரைப் போல பார்லி.யை நடத்த முடியாத மத்திய அரசு!

குளிர்கால கூட்டத் தொடர்
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த 22-ந் தேதி தொடங்கியது. தொடங்கிய முதல் இரண்டு நாட்களுமே அன்னிய முதலீடு விவகாரத்தினால் நாடாளுமன்றம் முடக்கப்பட்டது. இரண்டு நாள் விடுமுறைக்குப் பின்னர் இன்று காலை மக்களவையும் மாநிலங்களவையும் கூடிய போது சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கான அனுமதி தொடர்பாக வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் கோரி எதிர்க்கட்சிகள் முழக்கங்கள் எழுப்பின. எதிர்க்கட்சிகளின் முழக்கங்களால் இரு அவைகளிலும் கடுமையான அமளி நிலவியது. இதனால் இரு அவைகளும் தொடங்கிய சில நிமிடங்களிலேயே நண்பகல் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டன. பின்னர் 12 மணிக்கு இரு அவைகளும் கூடின. மக்களவையும் மாநிலங்களவையும் மீண்டும் சில நிமிடங்களிலேயே நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.
மழைக்கால கூட்டத் தொடர்
கடந்த ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேட்டுக்குப் பொறுப்பேற்று பிரதமர் மன்மோகன்சிங் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் இதேபோல் முழக்கங்களை எழுப்பினர். இதனால் மக்களவையும் மாநிலங்களவையும் சுமார் ஒரு மாத காலம் முடக்கி வைக்கப்பட்டது. மத்திய அரசால் நாடாளுமன்றத்தை நடத்த முடியாமல் அமளிகளுக்கு இடையே சில மசோதாக்களை நிறைவேற்றிவிட்டு நாள்தோறும் அவையை ஒத்திவைப்பதையே வழக்கமாக வைத்திருந்தது. அதே போன்ற ஒரு நிலைதான் தற்போதும் உருவாகி இருக்கிறது.
மழைக்கால கூட்டத் தொடரை சுமூகமாக நடத்த கடந்த முறை போலவே இம்முறையும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டியிருக்கிறது மத்திய அரசு. ஒருமித்த கருத்து ஏற்படாத நிலையில் மீண்டும் நாடாளுமன்றம் முடங்கும் நிலையே இருக்கிறது.
இப்படியே இந்தக் கூட்டத் தொடரையும் இழுத்தடித்துவிடலாம் என மத்திய அரசு கருதுவது என்பது ஜனநாயகத்துக்கு ஆரோக்கியமானது அல்ல என்பது அரசியல் விமர்சகர்களின் கருத்து.












Click it and Unblock the Notifications