திமுக முன்னாள் அமைச்சர் சமயநல்லூர் செல்வராஜ் காலமானார்

தி.மு.க. ஆட்சி காலத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்த சமயநல்லூர் செல்வராஜ், கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதனால் சென்னையில் உள்ள தமது மகள் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அவரது உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் நேற்று இரவு 7 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.
அவர் மரணமடைந்த செய்தியை கேள்விப்பட்டதும் திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று சமயநல்லூர் செல்வராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் கருணாநிதி விடுத்த இரங்கல் செய்தியில்,
ஆதிதிராவிடர் சமுதாயத்தில் ஓர் அற்புதமான இளைஞன், பெரியார், அண்ணா வகுத்துத் தந்த கொள்கைகளை வரி பிசகாமல் கடைப்பிடித்து மாணவப் பருவத்திலும், ஆசிரியர் பதவிப் பொறுப்பு வகித்த நேரத்திலும் சுயமரியாதை உணர்வோடு வாழ்ந்து என்னுடைய அமைச்சரவையில் அமைச்சராகப் பொறுப்பெற்று அந்தச் சமுதாயத்திற்காக அரும்பாடுபட்டவர்.
அதற்காக பல தொல்லைகளையும், கஷ்டங்களையும் மாற்றார் முகாம்களில் இருந்து ஏவப்பட்ட கண்ட னங்களையும் கண்டு கலங்காமல்- கஷ்ட நஷ்டங்களைப் பாராமல் கழகமே கண்ணெனக் கொண்டு அயராது பணியாற்றியவர். சமுதாய நல்லிணக்கத் தூதர்களில் ஒருவராக விளங்கிய அந்த அருமைத் தம்பி இறந்து விட்ட துயரத்தை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
இந் நிலையில் நேற்றிரவு செல்வராஜின் உடல் சென்னையில் இருந்து கார் மூலம் மதுரை கே.கே.நகரில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு ஏராளமான திமுகவினர் செல்வராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
சமயநல்லூர் செல்வராஜின் சொந்த ஊர் மதுரை மேலூர் அருகே உள்ள மீனாட்சிபுரம் புதூர் ஆகும். அந்த ஊரில் இன்று மாலை அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது.
மரணம் அடைந்த சமயநல்லூர் செல்வராஜ், ஆசிரியராக இருந்து அரசியலுக்கு வந்தவர். 1977ம் ஆண்டு சமயநல்லூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் 1980ம் ஆண்டு திமுகவில் இணைந்தார். 1984ம் ஆண்டில் சமயநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
மீண்டும் 1996ம் ஆண்டு அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரானார். 2001-ம் ஆண்டு மேலூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இவருக்கு புஷ்பவள்ளி என்ற மனைவியும், சித்திரை செல்வி, சிந்தனைசெல்வி என்ற மகள்களும், ராஜபிரபு என்ற மகனும் உள்ளனர்.
திமுகவின் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மறைந்து சில நாட்களிலேயே சமயநல்லூர் செல்வராஜும் மறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications