எவ்வளவு நேரம் தான் மின்தடை செய்கிறீர்கள்?: தமிழக அரசு முழு அறிக்கை வெளியிட ஹைகோர்ட் உத்தரவு

சென்னை அசோக் நகரைச் சேர்ந்த குடிமக்கள் பாதுகாவலர்கள் அமைப்பின் தலைவர் வி. ரவிச்சந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
சென்னை மாநகரிலும் மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் அடிக்கடி மின்சார விநியோகம் தடை செய்யப்படுகிறது. மின்சாரம் வழங்கப்படும் நேரத்திலும் கூட மின் அழுத்தம் குறைவாகவே உள்ளது. இதனால் சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் வசிக்கும் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆகவே இப்பிரச்னையில் நீதிமன்றம் உடனடியாகத் தலையிட வேண்டும். மாநிலத்தில் தேவையான அளவில் துணை மின் நிலையங்களை தொடங்குவது உள்பட மின்சார விநியோகத்துக்கான வலிமையான கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும்படி அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இந்த மனு தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால் மற்றும் நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது,
மாநிலத்தின் பல மாவட்டங்களில் தினமும் சில மணி நேரத்துக்கு மட்டுமே மின்சாரம் வழங்கப்படுவதாகவும், கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் தினமும் 12 மணி நேரத்துக்கும் மேலாக மின்சாரம் தடை செய்யப்படுவதாகவும் எங்களது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
ஆகவே ஒவ்வொரு மாவட்டத்திலும் தினமும் எத்தனை மணி நேரத்துக்கு மின்சாரம் நிறுத்தப்படுகிறது என்பது பற்றிய விரிவான அறிக்கையை தமிழ்நாடு மின்சார வாரியம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் நேரங்கள் பற்றிய தகவலை ஊடகங்கள் மூலமாக மக்களுக்கு முன்னதாகவே தெரியப்படுத்தாதது ஏன் என்பது பற்றியும் மின்சார வாரியம் தனது அறிக்கையில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளனர்.
மேலும் வழக்கு விசாரணையை வரும் டிசம்பர் மாதம் 3ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.












Click it and Unblock the Notifications