பால்தாக்கரே அஸ்தி.. சிவசேனா கட்சியினரை போலீசார் தடுத்ததால் பதற்றம்
கன்னியாகுமரி: மறைந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரே அஸ்தியுடன் கேரளாவின் திருவனந்தபுரத்தில் இருந்து கன்னியாகுமரிக்குள் நுழைய முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பதற்றம் உருவானது.
சிவசேனா தலைவர் பால்தாக்கரேயின் அஸ்தி நாட்டின் பல இடங்களில் கரைக்கப்பட்டு வருகிறது. தமிழக சிவசேனா கட்சியினர் சார்பில் இராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் நேற்று கரைக்கப்பட்டது.
இந்நிலையில் கேரளாவிலிருந்து சிவசேனா கட்சியின் பால்தாக்கரே அஸ்தியை முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் கரைக்க கொண்டுவந்தனர். ஆனால் அவர்களது வாகனங்களை தமிழக எல்லையான களியக்காவிளையில் போலீசார் தடுத்து நிறுத்தினர். அவர்களை தமிழகத்துக்குள் நுழையவும் போலீசார் அனுமதி மறுத்தனர்.
இதனால் சிவசேனா கட்சியினரின் வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டன. சிவசேனா கட்சியினர் போலீசாருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியதால் அங்கு பதற்றம் நிலவியது.












Click it and Unblock the Notifications