மாறன் சகோதரர்கள் மீதான வழக்கை மறுபடியும் விசாரியுங்கள்.. டிராபிக் ராமசாமி வழக்கு
சென்னை: தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்தபோது, சட்டவிரோதமாக பெறப்பட்ட 323 தொலைபேசி இணைப்புகள் குறித்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று கோரி சமூக சேவகர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கைத் தொடர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்த கால கட்டத்தில் 2007-ம் ஆண்டு சென்னை போர்ட் கிளப்பில் உள்ள அவரது வீட்டு முகவரிக்கு பி.எஸ்.என்.எல். ஜெனரல் மானேஜர் பெயரில் 323 டெலிபோன் இணைப்புகள் பெறப்பட்டுள்ளன. அங்கிருந்து சன் டி.வி. நிறுவனத்துக்கு கேபிள் வழியாக இந்த இணைப்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
தயாநிதி மாறன் வீட்டில் இதற்காக டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்களின் பணம் ரூ.400 கோடிக்கு மேல் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு ரூ.440 கோடி வருமான இழப்பு ஏற்பட்டு உள்ளது.
இந்த முறைகேட்டை கண்டித்து பி.எஸ்.என்.எல். தொழிலாளர் சங்கம் 2011-ல் பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரித்தது. ஆனால் எந்தவிதமான சட்டப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து மறு விசாரணை செய்யக்கேட்டு கடந்த 27.10.2012 அன்று சி.பி.ஐ. இயக்குனர் மற்றும் மத்திய தொலை தொடர்பு துறை செயலாளர் ஆகியோருக்கு மனு கொடுத்தேன். அதற்கு இதுவரை எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.
எனவே எனது கோரிக்கை மனுவை பரிசீலிக்கும்படி நீதிமன்றம் சி.பி.ஐ.க்கும், தொலைத் தொடர்பு துறைக்கும் உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார் ராமசாமி.
இந்த மனு நீதிபதிகள் எலிபே தர்மாராவ் மற்றும் அருணா ஜெகதீசன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜாராமிடம் நீதிபதிகள் 2007-ம் ஆண்டு நடந்த சம்பவத்துக்கு 2012-ல் மனு தாக்கல் செய்வது ஏன்? இந்த காலதாமதத்துக்கான காரணத்தை மனுதாரர் விளக்க வேண்டும் என்றனர்.
அதற்கு வக்கீல் கூறுகையில், இதுபற்றி சி.பி.ஐ. தரப்புதான் பதில் அளிக்க வேண்டும். இந்த முறைகேடு குறித்து மறு விசாரணை செய்ய கேட்டு சி.பி.ஐ.யிடம் மனு கொடுத்தோம். அந்த மனு பற்றி எந்த பதிலும் சி.பி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்படவில்லை என்று தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள் மனு மீதான விசாரணையை 4 வார காலத்துக்கு தள்ளி வைத்தனர்.
மேலும் கால தாமதத்துக்கான காரணம் குறித்து மனுதாரர் தரப்பில் தனியாக கூடுதல் மனு ஒன்றை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications