ஹய்யா..வந்துருச்சு காற்றழுத்தத் தாழ்வு நிலை.. மறுபடியும் மழை பெய்யலாமாம்!
சென்னை: வங்கக் கடலில், அதுவும் தமிழகத்திற்கு அருகில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ஒன்று உருவாகியுள்ளதாம். இது அப்படியே நிலை கொண்டு, தாழ்வு நிலையாக மாறினால் தமிழகத்தில் அடுத்த வாரத்தில் மழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வட கிழக்குப் பருவ மழை இந்த பெரிய அளவில் சிறப்பாக இல்லை. இடையில் நிலம் புயல் வந்து சென்ற போதிலும் கூட தமிழகம் முழுவதும் அதனால் பலன் பெறவில்லை. போதிய அளவு மழை இல்லாத நிலைதான்.
தற்போது தமிழகத்தின் அனைத்துப் பகுதியிலும் குளிரும், பனியுமாக உள்ளது. இதனால் மழை வருமா என்ற சந்தேகம் மக்கள் மனதில் இருந்து வருகிறது. இந்த நிலையில் மக்கள் மனதில் குளிர்ச்சியைக் கொண்டு வரும் வகையில், வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் அந்தமான் தீவுக்கு அருகே இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாகவும், இது அங்கேயே நிலை கொண்டு தாழ்வு நிலையாக மாறினால் அடுத்த வாரத்திலிருந்து தமிழகத்தில் மழையை எதிர்பார்க்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது டிசம்பர் 3ம் தேதிக்குப் பிறகு மழை பெய்யலாம் என்று வானிலை மையம் கூறியுள்ளது.
லேட்டானாலும் பரவாயில்லை,மக்கள் மனம் குளிர, மண்ணெல்லாம் நன்றாக நனையும் அளவுக்கு நல்ல மழை வந்தால் போதும்.