தமிழக என்கவுண்டர்களும் சில சர்ச்சைகளும்...
குற்ற வழக்கில் தொடர்புடையவர்கள் நீதிமன்ற விசாரணைக்குப் பின்னர் சிறைக்கு சென்று தண்டனையை அனுபவிப்பது ஒரு வகை. அதே குற்றவாளிகளுக்கு போலீசார் கையால் துப்பாக்கிக்குண்டுகளை பரிசாகப் பெற்று உயிரிழப்பது மற்றொரு வகை. போலீஸ் என்கவுண்டர்கள் என்றாலே பெரும்பாலும் சர்ச்சைகள்தான் மேலோங்கி நிற்கும். பல என்கவுண்டர்கள் செட்டப் செய்யப்பட்டவை என்ற குற்றச்சாட்டுக்கள், சர்ச்சைகள் எழுந்தாலும் கூட என்கவுண்டர்களுக்கு முடிவே இல்லாமல் நீண்டுகொண்டுதான் உள்ளது.
எஸ்.ஐ. ஆல்வில் சுதன் கொலைவழக்கில் கைதான பிரபு, பாரதி என்கவுண்டர்களோடு தமிழகத்தில் இதுவரை போலீஸ் என்கவுண்டருக்கு 77 பேர் வரை பலியாகியுள்ளதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. சில முக்கிய என்கவுண்டர்கள்...

நக்சல்களும் என்கவுண்டர்களும்
தமிழகத்தில் 1970களின் இறுதியில் நக்சலைட்கள் ஆதிக்கம் தலை தூக்கியது அப்போதுதான் முதல் முறையாக என்கவுண்டர் கொலைகள் நடந்தேறின. 1979-ல் நக்சலைட் அப்புவும் 1980ல் நக்சலைட் பாலனும் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் பல நக்சலைட்டுகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதன் பின்னர் 1990களில் திண்டுக்கல் அருகே நாகராஜன் என்ற நக்சலைட் சுட்டுக் கொல்லப்பட்டார். இதேபோல் ஊத்தங்கரை மற்றும் கொடைக்கானலில் நடந்த மோதல்களில் நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஆசைத்தம்பி- கபிலன் -மனோ
சென்னையில் 1996ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆசைத்தம்பி, மனோ ஆகிய ரவுடிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதேபோல் சென்னையில் 1999- ஆம் ஆண்டு ரவுடி கபிலன் சுட்டுக் கொல்லப்பட்டான்.

பெங்களூருவில் இமாம் அலி
2002ம் ஆண்டு தமிழக போலீஸ் படை பெங்களூர் சென்று அங்கு பதுங்கியிருந்த இமாம் அலி உள்ளிட்ட 5 பேரை சுட்டுக் கொன்றது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ரவுடிகளுக்கு சிம்ம சொப்பனம்
தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் இருக்கும்போது குறிப்பாக முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியில்தான் ரவுடிகளுக்கும், சமூக விரோதிகளுக்கும் காவல்துறை சிம்ம சொப்பனமாக இருக்கும். கடந்த 2002ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2003ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை ஜெயலலிதா பதவிக்காலத்தில் மட்டும் 11 ரவுடிகளை போலீஸார் சுட்டு வீழ்த்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெங்கடேசப் பண்ணையாரும் வீரமணியும்....
2003ம் ஆண்டு சென்னையில் வெங்கடேச பண்ணையார் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். அதே ஆண்டில் சென்னை கடற்கரையில் வைத்து சென்னை மாநகரையே நடு நடுங்க வைத்த பிரபல தாதா அயோத்தியா குப்பம் வீரமணி சுட்டு வீழ்த்தப்பட்டான். குறிப்பாக சென்னை மாநகர ஆணையராக விஜயக்குமார் இருந்தபோதுதான் இவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் தமிழ் தேசியவாதிகளான ராஜாராம் மற்றும் சரவணன் ஆகியோரும் என்கவுண்டரில் கொல்லப்பட்டனர். சந்தனக் கடத்தல் வீரப்பன் கடந்த 2004ம் ஆண்டு அக்டோபர் 18ம் தேதி தமிழக போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டான்.

திமுக ஆட்சி காலத்தில் 29
திமுக ஆட்சிக்காலத்தில் 2006ம் ஆண்டு மே முதல் 2010 ம் ஆண்டு டிசம்பர் வரை 29 பேர் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவற்றில் 2006ம் ஆண்டு மே 29 ல் கன்னியாகுமாரியைச் சேர்ந்த ராஜன், ஜூன் 7ம் தேதி சென்னையைச் சேர்ந்த நாகூர், ஆகஸ்ட் 12ல் செந்தில்குமார், அக்டோபர் 22ல் திருச்சி முட்டை ரவி, நவம்பர் 18 ல் காஞ்சிபுரம் கிருஷ்ணன், டிசம்பர் 12ல் சென்னை பங்க் குமார் கொல்லப்பட்டனர்.

வெள்ளை ரவி அட்டாக்
2007 ஜனவரியில் மதுரை மாரிமுத்து, பிப்ரவரி 5-ம் தேதி, மணல்மேடு சங்கர், மயிலாடுதுறையில் இருந்து மதுரை சிறைக்கு அழைத்துச் செல்லும் வழியில் போலீஸாரை தாக்க முயன்றபோது சுட்டுக் கொல்லப்பட்டான். ஆகஸ்ட் 1-ம் தேதி, வெள்ளை ரவி மற்றும் அவனது கூட்டாளி குணா ஆகியோர் ஒசூர் அருகே சுட்டுக் கொல்லப்பட்டனர்.

வெடிகுண்டு வீசிய ரவுடி
2008, ஏப்ரல் 3-ம் தேதி, தஞ்சாவூர் கரந்தை பகுதியில், பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய மிதுன் சக்ரவர்த்தி என்பவன் போலீஸார் மீது வெடிகுண்டு வீசியபோது சுட்டுக் கொல்லப்பட்டான். அதேபோல் 2009, பிப்ரவரி 2-ம் தேதி, பல வழக்குகளில் தொடர்புடைய சண்முகம் சென்னையில் சுட்டுக் கொல்லப்பட்டான். திண்டுக்கல் தெய்வேந்திரன், சிவகங்கை சண்முகம், சென்னை தனசேகர், விருதுநகர் சுந்தரமூர்த்தி ஆகியோர் என்கவுண்டருக்கு பலியானார்கள்.

2010ல் அதிக என்கவுண்டர்
2010 பிப்ரவரி 16-ம் தேதி, கல்மண்டையன், கவியரசு ஆகிய ரவுடிகள் மதுரையில் சுட்டுக் கொல்லப்பட்டனர். பிப்ரவரி 17-ம் தேதி, பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய திண்டுக்கல் பாண்டி, வேலு ஆகிய ரவுடிகள் சென்னையில் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஏப்ரல் 30ம் தேதி போலீசை வெட்டிய ரவுடி குமாரை சாத்தூர்- கோவில்பட்டி சாலையில் என்கவுண்டர் செய்தனர் போலீசார். நவம்பர் 8-ம் தேதி, கோவையில் பள்ளிச் சிறுமியையும் அவளது சகோதரனையும் கொலை செய்த மோகன்ராஜ் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அதிமுக ஆட்சியில் இதுவரை 7
2011ம் ஆண்டு அதிமுக அரசு பொறுப்பேற்ற உடன் மீண்டும் சென்னையில் மிகப்பெரிய என்கவுண்டர் நடந்தது. 2012ம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி நள்ளிரவு சென்னையில் வங்கிக்கொள்ளையில் ஈடுபட்ட வடமாநில கொள்ளையர்கள் 5 பேர் கொல்லப்பட்டனர். நேற்றைய தினம் ஆல்வின் சுதன் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் இரண்டுபேரை என்கவுண்டர் செய்துள்ளனர் போலீசார்.

வெள்ளைத்துரையின் என்கவுண்டர்
அயோத்திகயா குப்பம் வீரமணி, வெங்டேசப்பண்ணையார், இராசாராம், , பிரபு, பாரதி உள்ளிட்ட 12 என்கவுண்டர்களில் காவல்துறை அதிகாரி வெள்ளைத்துரையின் பெயர் அடிபடுகிறது. சந்தனக் கடத்தல் வீரப்பனை வேட்டையாடிய அதிரடிப்படை குழுவில் இடம் பெற்றிருந்தவர் வெள்ளைத்துரை. அப்போது இவருக்கு இரட்டை பதவி உயர்வை அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா வழங்கினார். இதன் மூலம் சப் இன்ஸ்பெக்டராக இருந்த வெள்ளைத்துரை, டி.எஸ்.பி. ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. மானாமதுரை டி.எஸ்.பியாக பொறுப்பேற்று 1 மாதம் நிறைவடைவதற்கு முன்பாகவே இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications