சீனாவில் நடுரோட்டில் இருந்த வீடு இடிக்கப்பட்டது: கண்ணீருடன் காலி செய்தார் உரிமையாளர்

கடந்த மாதம் ஊடகங்களிலும், இணையதளங்களிலும் அதிகம் இடம் பெற்ற வீடு எதுவெனில் சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள வென்லிங் நகரில் நடுரோட்டில் இருந்த வீடுதான் என்று கூறவேண்டும். இதற்குக் காரணம் ஒரே ஒரு வீடு மட்டும் தனியாக இருக்க அதனைச் சுற்றிலும் சாலைகள் இருந்ததே பரபரப்பிற்கு காரணமாக அமைந்தது.
வென்லிங் நகரில் அமைக்கப்பட்டுள்ள புதிய ரெயில் நிலையத்திற்கு பயணிகள் வாகனங்களில் வந்து சேருவதற்காக விரைவு நெடுஞ்சாலை அமைக்க சீன அரசு திட்டமிட்டது. இதற்காக அந்த பகுதியில் இருந்த வீடுகள் அனைத்தும் அகற்றப்பட்டன. அரசு தரப்பில் உரிய இழப்பீடும் வழங்கப்பட்டது. ஆனால் அந்த பகுதியில் வசித்து வந்த வாத்துப்பண்ணை உரிமையாளரான லூ என்பவர் தன் வீட்டை காலி செய்ய மறுத்து விட்டார்.
6 லட்சம் யுவான் செலவழித்து, தன் வீட்டை கட்டியுள்ளதாகவும், அரசு தரும் 2 லட்சத்து 20 ஆயிரம் யுவான் இழப்பீட்டை பெற்றுக் கொண்டு, நான் எங்கே போய் இடம் வாங்கி, வீடு கட்டி வாழ முடியும் என்று வாதாடிய அவர் இறுதிவரை அந்த வீட்டை காலி செய்யவில்லை. மூன்று வருடமாக சர்ச்சை நீடித்தது.
இந்நிலையில் அந்த வீட்டை மட்டும் இடிக்காமல் விட்டுவிட்டு இருபுறமும் நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது. போக்குவரத்துக்கு இடையூறாக அச்சாலையின் நடுப்பகுதியில் இவரது வீடு மட்டும் தனியாக இருந்த காட்சி, பல ஊடகங்களிலும், இணைய தளங்களிலும் வெளியாகின.
இந்த வீட்டை படம்பிடிக்கவும், உரிமையாளரை பேட்டி காணவும் பத்திரிக்கையாளர்கள் அந்த வீட்டை முற்றுகையிடவே லூ வேதனை அடைந்தார்.
அப்பகுதியில் முன்னர் குடியிருந்த வீட்டு உரிமையாளர்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டையும் உயர்த்தி வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கவே லூ-வின் வீட்டிற்கான இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்க சீன அரசு சம்மதித்தது. இதனை ஏற்றுக்கொண்டு லூ கண்ணீருடன் வீட்டை காலி செய்தார். இதையடுத்து, மாகாண அதிகாரிகள் இன்று அந்த வீட்டை இடித்து தரைமட்டமாக்கினார்கள். சாலையின் நடுவே நடுநாயகமாக அமைந்திருந்த வீட்டினை இடித்து தரைமட்டமாக்கிய காட்சியை பலரும் வேடிக்கை பார்த்தனர்.












Click it and Unblock the Notifications