பாபர் மசூதி இடிப்பு நாள்: தமிழகத்தில் பாதுகாப்பு பணியில் 1 லட்சம் போலீசார்!
சென்னை: உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளான இன்று அசம்பாவிதங்களைத் தடுக்க தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.
பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் போன்ற மக்கள் அதிகமாகக் கூடும் பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டிருக்கின்றனர். இத்தகைய இடங்களில் ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி சந்தேகப்படும்படியான நபர்கள் கண்காணிக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
பல்வேறு குண்டுவெடிப்பு வழக்குகளில் தொடர்புடைய தீவிரவாதிகளின் படத்தோடும் சோதனைச் சாவடிகளில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். முக்கியமான இடங்களில் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
ரயில் நிலையங்களில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். ரயில் நிலையத்துக்குள் நுழைவதற்கு ஒரு வழியும், வெளியே செல்வதற்கு இன்னொரு வழியும் மட்டுமே ஏற்படுத்தப்பட்டுள்ளது. பயணிகளின் அனைத்து உடைமைகளும் கடுமையாக சோதிக்கப்படுகின்றன. இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் நாளை வரை நீடிக்கும். சென்னை நகரில் மட்டும் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.