தமிழகத்துக்கு கர்நாடகம் 12 டி.எம்.சி. நீர் திறந்து விட கண்காணிப்புக் குழு உத்தரவு!

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி டெல்லியில் இன்று காவிரி கண்காணிப்புக் குழுவின் கூட்டம் நடைபெற்றது. மத்திய நீர்வளத்துறை செயலர் துருவிஜய்சிங் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தமிழக, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
36 டி.எம்.சி. கோரிய தமிழகம்
தமிழகத் தரப்பில், 15 லட்சம் ஏக்கர் சம்பா பயிர்களைக் காப்பாற்ற மொத்தம் 32 டி.எம்.சி. நீர் தேவை. ஆனால் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி திங்கள்கிழமை வரை மொத்தமே 4.33 டி.எம்.சி. நீர்தான் கிடைக்கும். இது இல்லாமல் டிசம்பர் மாதம் வரை கர்நாடகம் மேலும் 31.67 டி.எம்.சி. நீரை தமிழகத்துக்குத் தர வேண்டியதும் இருக்கிறது. எனவே தமிழ்நாட்டுக்கு 36 டி.எம்.சி. நீர் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
கர்நாடகா கை விரிப்பு
கர்நாடகா தரப்போ, டிசம்பர் முதல் மே மாதம் வரை கர்நாடகாவுக்கு 62 டி.எம்.சி. தண்ணீர் தேவை. பெங்களூர் நகர குடிநீர் தேவைக்கே 23 டி.எம்.சி. நீர் தேவைப்படுகிறது. ஆனால் கர்நாடகா அணைகளிலோ மிகக் குறைந்த அளவே நீர் இருப்பு உள்ளது. இதனால் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது என்று வாதிட்டது.
டிசம்பருக்குள் 12 டி.எம்.சி. கொடுக்க உத்தரவு
பின்னர் காவிரி கண்காணிப்புக் குழு பிறப்பித்த உத்தரவில், தமிழகத்துக்கு டிசம்பர் மாதத்துக்குள் 12 டி.எம்.சி.நீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும். காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு இம்மாதத்துக்குள் அரசிதழில் வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார். மேலும் காவிரியில் நீர் திறப்பு குறித்து கண்காணி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சுப்ரீம் கோர்ட் உத்தரவையே ரொம்ப யோசித்து அமல்படுத்தும் கர்நாடக அரசு, இந்த உத்தரவையும் அமல்படுத்துமா என்பது சந்தேகமாகவே உள்ளது.












Click it and Unblock the Notifications