காவிரி விவகாரம்: ஜெயலலிதா போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துவிட்டது- தா.பாண்டியன்
தஞ்சாவூர்: கர்நாடக அரசு தமிழகத்திற்கு தினந்தோறும் 10,000 கன அடி நீரை திறந்து விட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது முதல்வர் ஜெயலலிதாவின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தஞ்சையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
காவிரி நீர் பிரச்சனையில் கர்நாடகா மாநிலத்துக்கு எதிராக முதல்வர் ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது தவறு. இதனால் மாநிலங்களுக்கு இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது என்பது உள்பட பல்வேறு விமர்சனங்களை சில கட்சிகள் முன்வைத்தன.
ஆனால் பல்வேறு விமர்சனங்களுக்கு இடையேயும் சற்றும் மனம் தளராத ஜெயலலிதா காவிரியில் இருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீரைக் கேட்டு உச்ச நீதிமன்றத்தை அணுகினார். இந்த பிரச்சனை குறித்து தமிழக, கர்நாடக முதல்வர்கள் பேச்சுவார்த்தை நடத்த உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. அதன்படி ஜெயலலிதா பெங்களூர் சென்று கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரை சந்தித்து பேசினார்.
ஆனால் கர்நாடகா தொடர்ந்து காவிரி நீரை வழங்க மறுத்ததால் மீண்டும் உச்ச நீதிமன்றத்தை தமிழக அரசு அணுகி, முறையிட்டது. அதன் பயனாக, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவில் காவிரியில் இருந்து தினமும் 10,000 கன அடி நீரை திறந்து விடும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. மேலும் அந்த உத்தரவில், இரு மாநில தண்ணீர் தேவையை முடிவு செய்யும் வகையில் கண்காணிப்புக்குழு கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
இது தமிழக மக்களுக்காக முதல்வர் ஜெயலலிதா நடத்திய போராட்டத்துக்கு கிடைத்த முதல் வெற்றி என்றார்.












Click it and Unblock the Notifications