காவிரி நீர் திறப்புக்கு எதிர்ப்பு- கர்நாடகாவில் தொடர் போராட்டம்-சட்டசபை முடக்கம்!
பெல்காம்: தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்கப்பட்டிருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கர்நாடகாவில் போராட்டங்கள் தொடர்ந்து நீடித்து வருகிறது. மண்டியா மாவட்டத்தில் 3-வது நாளாக இன்றும் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
சட்டசபை முடக்கம்
பெல்காமில் தற்போது நடைபெற்று வரும் கர்நாடகா சட்டசபைக் கூட்டத்தில் காவிரி நீர் திறப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், காவிரி நீரைத் திறந்துவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சபையில் தர்ணா போராட்டம் நடத்தினர். இதனால் முதலில் அவையை சபாநாயகர் போபையா சிறிது நேரம் ஒத்தி வைத்தார். பின்னர் அவை கூடியபோதும் தர்ணா நீடித்ததால் சபையை நாள் முழுவதும் ஒத்தி வைப்பதாக சபாநாயகர் அறிவித்தார். உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்காமல் தமிழகத்துக்கு காவிரி நீரைத் திறக்கக் கூடாது என்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை கர்நாடகா தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் என்றும் இந்தக் கட்சிகள் வலியுறுத்தின.
மண்டியாவில் முழு அடைப்பு
மேலும் தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்துவிடப்படும் கிருஷ்ணராஜ சாகர் அணை அமைந்திருக்கும் மண்டியா மாவட்டத்தில் இன்று 3-வது நாளாக முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. நேற்று மண்டியாவில் காவிரி பாதுகாப்புக் குழுத் தலைவர் மாதே கவுடா தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது. இன்றும் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மண்டியா அருகே சாம்ராஜ் நகரிலும் தலைநகர் பெங்களூரிலும் இன்று போராட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டிருக்கின்றன.