'கர்நாடக ஜனதா கட்சி' -முறைப்படி தொடங்கினார் எதியூரப்பா! பாஜக எம்.எல்.ஏக்கள் பங்கேற்பு!

கர்நாடகாவின் ஹாவேரியில் இன்று பிற்பகல் நடைபெற்ற பிரம்மாண்டமான மாநாட்டில் பிரம்மாண்ட பேரணியுடன் தமது கட்சியை முறைப்படி தொடங்கினார் எதியூரப்பா. எதியூரப்பாவின் புதிய அரசியல் பயணத்தில் பாஜகவின் 10க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்களும் கலந்து கொண்டனர்.முன்னதாக எதியூரப்பா கொடுத்த காலை விருந்தில் 21 பாஜக எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர். மேலும் 7 எம்.எல்.சிகளும் 4 லோக்சபா எம்.பிக்களும் பங்கேற்றனர்.
பாரதிய ஜனதா கட்சி மேலிடத்தின் எச்சரிக்கைகளையும் மீறி எம்.எல்.ஏக்களும் எம்.பிக்களும் எதியூரப்பாவின் பின்னால் அணி திரள்வதால் பாஜக தலைவர்கள் பெரும் கலக்கத்தில் இருக்கின்றனர். பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் பலரும் எதியூரப்பா கட்சியில் ஐக்கியமாகியிருக்கின்றனர்.
கர்நாடக ஜனதா கட்சி தொடக்க விழாவில் பேசிய எதியூரப்பா, கர்நாடகா மக்களுக்கு நன்மை செய்யவே தாம் கட்சியைத் தொடங்கியிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். மேலும் தற்போதைய ஜெகதீஷ் ஷெட்டர் தலைமையிலான அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்றும் அரசைக் கவிழ்த்துவிட்டு தேர்தலை நடத்த தயாரா? என்றும் எதியூரப்பா கேள்வி எழுப்பியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications