கர்நாடகா மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க தொல். திருமாவளவன் வலியுறுத்தல்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரியில் 10 ஆயிரம் கன அடி தண்ணீர் தர வேண்டும் என்ற உச்சநீதிமன்றம் இடைக்கால ஆணை பிறப்பித்தது. ஆனால் கர்நாடகா அரசோ தமிழகத்துக்கு குறிப்பிடும்படியான அளவு நீரைத் திறந்துவிட மறுத்துவருகிறது, இதனிடையில் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடுகிறோம் என மைய அரசு கூறியுள்ளது. ஒரு விதத்தில் இது தமிழ்நாட்டுக்கு நல்லதுதான் என்றாலும், அரசிதழில் வெளியிடுவதால் மட்டுமே காவிரியில் தண்ணீர் வந்துவிடப் போவதில்லை. எத்தனை அமைப்புகள் எத்தனை ஆணைகளைப் பிறப்பித்தாலும் தண்ணீர் தருவதில்லை என்பதில் கர்நாடகா பிடிவாதமாக உள்ளது.
மைய அரசு தனது பொறுப்பை நிறைவேற்றாமல் உச்சநீதிமன்றத்தின் தலையில் சுமத்துவது மத்திய அரசுக்கு அழகல்ல. இத்தகைய சூழல் உருவானால் மத்திய அரசு மாநில அரசை முடக்கி வைப்பதற்கான அதிகாரம் அரசியல் அமைப்புச் சட்ட உறுப்பு 365 மூலம் வழங்கப்பட்டிருக்கிறது. அரசியல் சட்டம் 365ன்கீழ் நடவடிக்கை எடுக்க எந்தவொரு தடையுமில்லை. எனவே மைய அரசு அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி கர்நாடக அரசை எச்சரிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது என்று அதில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications