''ஒளவை போதித்தது சிக்கனம், நமக்கு தேவை மின் சிக்கனம்.. மின்வாரியத்தின் புதிய ஆத்திச்சூடி''!
சென்னை: குழந்தைகளுக்கு ஆத்திச்சூடி சொல்லித் தருவது போல தமிழக மக்களுக்கு மின்வாரியம் ஒரு புதிய ஆத்திச்சூடியை அறிமுகப்படுத்தியுள்ளது. மின்சார சேமிப்பு விழிப்புணர்வு தொடர்பான நவீன ஆத்திச்சூடிதான் இது.
மின்சாரம் என்பது கடவுள் போலாகி விட்டது தமிழகத்தின் 99 சதவீத மக்களுக்கு. மிச்சமுள்ள ஒரு சதவீத மக்கள் சென்னையைச் சேர்ந்தவர்கள். இந்த நிலையில், மின்சேமிப்பு தொடர்பான ஆத்திச்சூடி பாணி அட்வஸை பிட் நோட்டீஸ் போல விநியோகிக்க ஆரம்பித்துள்ளது மின்வாரியம். மின்சாரத்தை சிக்கனப்படுத்த தினமும் ஒரு பாடம் சொல்லித் தருகிறது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம். அதற்குத்தான் மின் ஆத்திச்சூடி என்று அது பெயரிட்டுள்ளது.

அதிக நட்சத்திர குறியீடு, அதிக மின்சேமிப்பு
இது மின் ஆத்திச்சூடியின் முதல் பாடம். அதிக அளவிலான மின்சேமிப்பை எப்படி உறுதிப்படுத்தலாம் என்பதை இது சொல்கிறது.

ஆதவனை ஆற்றலுக்கு பயன்படுத்து
சூரிய சக்தி மின்சாரம் குறித்த விழிப்புணர்வுக்கு இந்த இரண்டாவது ஆத்திச்சூடி.

இயன்றவரை பயன்படுத்து இயற்கை காற்றையும், ஒளியையும்
காற்றாலை மின்சாரத்தையும், சூரிய சக்தி மின்சாரத்தையும் வலியுறுத்தும் வாசகம் இது.

ஈகையை வளர்ப்போம், மின் விரயத்தை தடுப்போம்
தேவையில்லாமல் மின்சாரத்தைப் பயன்படுத்தி, வீணாக்குவதை தடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வாசகம் இது.

உலக வெப்பமயமாதலை தடுப்போம்
சீரியல் செட் உள்ளிட்ட அதிக அளவில் விளக்குகளைப் பயன்படுத்தி வெப்பத்தைக் கூட்டுவதோடு, மின்சாரத்தையும் வீணாக்குவதைத் தவிர்த்து, உலக வெப்பமயமாதலையும் தடுப்போம் என்ற விழிப்பணர்வுக்கு இந்த வாசகம்.

ஊரெங்கும் மின் சிக்கன செய்தியை பரப்புவோம்
நாம் மட்டும் மின்சாரத்தைச் சிக்கனப்படுத்தாமல், நாம் பயன்படுத்திய வழிகளை நம்மைப் போன்றவர்களுக்கும் சொல்லி அவர்களையும் ஊக்கப்படுத்த இந்த வாக்கியம்.

எத்தனை வருடம் கிடைக்கும் கரியும், எண்ணெயும், வாயுவும்?
நிலக்கரி, இயற்கை எரிவாயு உள்ளிட்டவற்றை நீண்ட நாட்களுக்கு நாம் நம்பியிருக்க முடியாது, புதிய எரிபொருள் பயன்பாட்டை நாம் உணர வேண்டும் என்பதைச் சொல்லும் வாசகம் இது.

ஏனிந்த மெத்தனம்? இக்கணம் தொடங்குவீர் மின் சிக்கனம்
மின்சாரத்தை சிக்கனப்படுத்தும் முயற்சிகளில் தாமதமோ, மெத்தனமோ கூடாது, இன்றே தொடங்குங்கள் என்று சொல்கிறது இந்த வாக்கியம்.

ஐயமின்றி வாழ ஆங்காங்கு சிக்கனம்
மின்சாரத்தை சிக்கனப்படுத்தினால் அதை அனைவரும் சமமாக அனுபவிக்க முடியும், கரண்ட் வருமா, வராதா என்ற பிரச்சினையும் குறையும் என்பதைச் சொல்கிறது இந்த வரிகள்.

ஒரு யூனிட் சேமிப்பு, இரு யூனிட் உற்பத்திக்கு சமம்
ஒரு யூனிட் மின்சாரத்தை சேமித்தால், அது இரண்டு யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்ததற்குச் சமம் என்று கூறுகிறது மின்வாரியம்.

ஓயாமல் பரப்புவோம் மின்சேமிப்பு செய்திகளை
மின்சாரச் சேமிப்பு தொடர்பான செய்திகளை, நாம் மட்டும் கற்றுக் கொள்வதோடு நிற்காமல் அனைவருக்கும் சொல்லி அவர்களையும் சிக்கனப் பாதைக்குத் திருப்புவோம் என்கிறது மின்வாரியம்.
ஒளவை அன்று போதித்தது பொது சிக்கனம், நமக்கு இன்று தேவை மின் சிக்கனம்
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்... ஒளவையார் என்று சிக்கனத்தைப் போதித்தார். நமக்கு இன்று தேவைப்படுவது அது மட்டுமல்ல, மின்சாரச் சிக்கனமும் கூட என்று கூறி ஒளவையின் ஆத்திச்சூடி வழியில் நல்ல பல அறிவுரைகளைச் சொல்லி முடித்துள்ளது மின்வாரியம் தனது புதிய ஆத்திச்சூடியை.












Click it and Unblock the Notifications