"சேலம் மாவட்ட செயலாளர்- வருங்கால வேளாண்துறை அமைச்சர் வீரபாண்டி ராஜா' - சங்ககிரியில் பரபரப்பு போஸ்ட்
சேலம்: சேலம் மாவட்ட திமுகவில் வீரபாண்டி ஆறுமுகம் மறைந்த பிறகும் சர்ச்சைகள் ரெக்கை கட்டிப் பறக்கத்தான் செய்கிறது.
சேலம் மாவட்ட திமுக செயலாளராக வீரபாண்டி ஆறுமுகம் இருந்த காலத்திலும் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லை. திமுக தலைமைக்கு சவால்விடும் போக்கையே கடைபிடித்து வந்தார். அவர் மறைவுக்குப் பிறகு சேலம் மாவட்ட திமுக செயலாளர் பதவி அவர் மகன் ராஜாவுக்கு கிடைக்கும் என்று பலரும் எதிர்பார்த்த்தனர்.
ஆனால் சேலம் மாவட்ட பொறுப்பாளராக மாவட்ட துணை செயலராக இருந்த சிவலிங்கம் நியமிக்கப்பட்டார். இதில் வீரபாண்டி ராஜா கோஷ்டி கடும் அதிருப்தி அடைந்தது. இதேபோல் பதவியை எதிர்த்து பார்த்து காத்திருந்த பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் கோஷ்டிக்கும் எரிச்சலானது.
இந்நிலையில் சங்ககிரி பகுதியில் திமுகவினர் ரகசிய ஆலோசனைக் கூட்டம் நடத்தி, வீரபாண்டி ராஜாவுக்கு திமுக செயற்குழுவில் பதவி வழங்க வேண்டும் என்று கட்சி மேலிடத்தை வலியுறுத்த தீர்மானிக்கப்பட்டிருக்கிறதாம்
இதே போல் சங்ககிரி அக்கம்மாபேட்டையி, "சேலம் மாவட்ட செயலாளராக, வருங்கால வேளாண் அமைச்சரான வீரபாண்டி ராஜாவை நியமனம் செய்த, தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கும், ஸ்டாலினுக்கும் நன்றி, நன்றி' என, போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டுள்ளது.
இது வீரபாண்டி ராஜாவை கிண்டலடித்து ஒட்டப்பட்டதா? அல்லது வீரபாண்டி ராஜாவின் ஆதரவாளர்களாலேயே ஒட்டப்பட்டதா? என்று திமுகவின் குழப்பத்தில் ஆழ்ந்து போயுள்ளனர்.
ஆனால் இதை நிராகரித்திருக்கும் ராஜா, விரைவில், உள்கட்சி தேர்தல் நடக்க உள்ளது. அப்போது மாவட்ட செயலர் பதவிக்கு போட்டியிடுவது பற்றி யோசிப்பேன். தலைமை யாரை அறிவிக்கும் என்று தெரியாது. கட்சியில் இருந்து வெளியேறுவதாக கூறியவர்களை, மீண்டும் கட்சியில் இணைத்துள்ளேன். அப்பாவுக்கான, காரியச்சடங்குகள் சில உள்ளன. அது முடிந்த பின், எப்போதும் போல், கட்சியில் பணியில் தீவிரமாக ஈடுபடுவேன் என்றார்.












Click it and Unblock the Notifications