பொள்ளாச்சி: அரசுப் பேருந்தில் சிக்கி பள்ளி மாணவி பலி- டிரைவர் கைது
பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பெள்ளாச்சியில் அரசு பேருந்தில் சிக்கி பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சியை அடுத்த வடுகபாளையத்தை சேர்ந்தவர் சரண்யா (வயது 14). இவர் பொள்ளாச்சி மாரியம்மாள் நகராட்சி பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். தன்னுடைய வீட்டில் இருந்து சைக்கிளில் பள்ளிக்கு சென்று வருவது சரண்யாவின் வழக்கம். அதேபோல் இன்று காலையிலும் சரண்யா தனது சைக்கிளில் பள்ளிக்கு புறப்பட்டார்.
பொள்ளாச்சி - கோவை ரோட்டில் சென்ற போது எதிரே நாகூரிலிருந்து பொள்ளாச்சி நோக்கி வந்த அரசு பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கினார். இதில் சக்கரம் சரண்யாவின் தலையில் ஏறியதில் சம்பவ இடத்திலேயே சரண்யா உயிரிழந்தார்.
பள்ளி அருகிலேயே விபத்து நடந்ததால் உடனடியாக பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்தனர். சரண்யாவின் பெற்றோர் அங்கு வந்து கதறி அழுத காட்சி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
தகவலறிந்ததும் பொள்ளாச்சி கிழக்கு காவல்நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சரண்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து பேருந்து ஓட்டுநர் வெள்ளிங்கிரி கைது செய்யப்பட்டார்.
விருதுநகரில் அரசுப் பேருந்து விபத்து-டிரைவர் பலி:
இந் நிலையில் விருதுநகரில் அரசுப் பேருந்து ஒன்று பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், டிரைவர் பலியானார்.
சென்னையில் இருந்து கன்னியாக்குமரி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து விருதுநகர் மாவட்டம் எட்டூருவட்டம் பகுதியில் ஆற்றுப் பாலத்தைக் கடந்த போது, பாலத்தின் சுவற்றில் மோதியது.
இதில் டிரைவர் சம்பவ இடத்திலேயே பலியானார். 8 பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications