மாநகராட்சி கேன்டீனில் ஆவரம்பூ சாம்பார், வேப்பம்பூ ரசம், மூலிகை கூட்டை ருசித்த அமைச்சர்கள்
சென்னை: சென்னை மாநகராட்சி கேன்டீனில் தயார் செய்யப்பட்ட சாதம், ஆவாரம்பூ சாம்பார், வேப்பம்பூ ரசம், துளசி மோர், பிரண்டை துவையல், மூலிகை கூட்டு ஆகியவற்றை அமைச்சர்கள் ருசித்து சாப்பிட்டனர்.
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் மூலிகை உணவு கேன்டீன் திறக்கப்பட்டது. அங்கு மூலிகை டீ, சூப், மூலிகை உணவுகள் விற்பனை செய்யப்படுகிறது. உடலுக்கு நலம் பயக்கும் மூலிகை உணவுகளை சாப்பிட பலர் அந்த கேன்டீனுக்கு வருகின்றனர். அவ்வாறு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.
அதிக அளவில் வாடிக்கையாளர்கள் வருவதால் அவர்களுக்கு சிரமமின்றி உணவு வழங்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் அரசு அலுவலர்கள் ஏராளமானோர் அந்த கேன்டீனுக்கு வந்து விரும்பி சாப்பிடுகின்றனர். கேன்டீனில் வரிசையில் நின்று உணவு வாங்கி சாப்பிட வேண்டிய நிலை உள்ளது.
இதற்கிடையே மூலிகைகளை கொல்லிமலையில் இருந்து கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் மூலிகை பூங்காக்கள் அமைக்கவும் மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் அமைச்சர்களுக்கு மதிய உணவு வேளையில் மூலிகை சாப்பாடு வழங்கப்பட்டது. அவர்களுக்கு சாதம், ஆவாரம்பூ சாம்பார், வேப்பம்பூ ரசம், துளசி மோர், பிரண்டை துவையல், மூலிகை கூட்டு பரிமாறப்பட்டது. அமைச்சர்கள் மூலிகை உணவை ருசித்து ரசித்து சாப்பிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications