அமெரிக்காவில் ஷாப்பிங் மாலில் துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட நபர்: 2 பேர் பலி
போர்ட்லேண்ட்: அமெரிக்காவில் உள்ள போர்ட்லேண்டில் இருக்கும் ஷாப்பிங் மாலுக்குள் புகுந்த நபர் ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டதில் அங்கு கிறிஸ்துமஸ் பண்டிக்கைக்காக பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த 2 பேர் பலியாகினர், பலர் காயம் அடைந்தனர்.
அமெரிக்காவில் உள்ள போர்ட்லேண்டில் உள்ளது கிளாக்கமாஸ் டவுன் சென்டர் என்னும் ஷாப்பிங் மால். நேற்று அந்த மாலில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பொருட்கள் வாங்க வந்தோரின் கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது மாலுக்கு வந்த ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து கூட்டத்தை நோக்கி சுடத் தொடங்கினார்.
இதையடுத்து அங்கிருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு அங்கும் இங்குமாக ஓடினர். அந்த நபர் சுட்டதில் குண்டு பாய்ந்து 2 பேர் பலியாகினர். மேலும் பலர் காயம் அடைந்தனர். துப்பாக்கியால் சுட்ட நபர் இறந்துவிட்டார் என்று போலீசார் தெரிவித்தனர். ஆனால் அவர் எப்படி இறந்தார் என்று தெரிவிக்கவில்லை.
அங்குள்ள கடை ஒன்றில் பணியாற்றுபவர் ஒருவர் கூறுகையில்,
குட்டையான மனிதர் ஒருவர் குண்டு துளைக்காத கவசம் அணிந்து வந்தார். முகத்தை வெள்ளை துணியால் மறைத்திருந்தார். நான் பிறரை சுடப்போகிறேன் என்று தெரிவித்தார். அதன் பிறகு அவர் தன் துப்பாக்கியை எடு்த்து சுடத் தொடங்கினார் என்றார்.