சரியாக 12-12-12-12-12க்கு அப்பாவான கல்லூரி மாணவர்
திருப்பதி: ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவரின் மனைவிக்கு 12ம் தேதியான நேற்று பிற்பகல் 12.12 மணிக்கு குழந்தை பிறந்தது. இதனால் கல்லூரி மாணவரும், அவரது மனைவியும் பெரும் சந்தோஷமடைந்துள்ளனர்.
நேற்று 12-12-12 என்று ஒரே மாதிரியான எண்களில் வந்த நாளால், உலகமே தலைகீழாக மாறிப் போய்க் காணப்பட்டது. இந்த நாளைப் போல இன்னொரு நாளைப் பார்க்க இன்னும் நூறாண்டு காத்திருக்க வேண்டுமே என்பதால் மக்களெல்லாம் நேற்றைய நாளை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
நேற்றைய நாளை விசேஷமாக கருதி, மருத்துவமனைகளிலும் நேற்று சிசேரியன் பிரசவங்கள் களை கட்டியிருந்தன. இந்த நிலையில் ஆந்திர மருத்துவமனை ஒன்றில் 12ம் தேதியான நேற்று ஒரு பெண்ணுக்கு சரியாக பிற்பகல் 12.12 மணிக்கு குழந்தை பிறந்து அனைவரையும் அதிசயிக்க வைத்துள்ளது.
அனந்தப்பூரை சேர்ந்தவர் ராஜசேகர். இவரது மனைவி காயத்ரி. திருப்பதியில் ஒரு தனியார் கல்லூரியில் ராஜசேகர் படித்து வருகிறார். நிறை மாத கர்ப்பிணியாக இருந்து வந்த காயத்ரிக்கு, கடந்த 9ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டது. இதனால், அவரை திருப்பதியில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவருக்கு நேற்று மதியம் 12.12 மணிக்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இது குறித்து ராஜசேகர் கூறுகையில், என் மனைவி காயத்ரிக்கு இந்த மாதம் 20ம் தேதிதான் குழந்தை பிறக்கும் என டாக்டர்கள் கூறியிருந்தனர். ஆனால், 100 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வரும் அரிய, அபூர்வ நாளான 12-12-12 அன்று பிற்பகல் 12.12 மணிக்கு குழந்தை பிறந்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்றார் மகிழ்ச்சியுடன்.












Click it and Unblock the Notifications