12.12.72 பிறந்து 12.12.12ல் தற்கொலை செய்து கொண்ட சோகம்! 12 பக்க மரண வாக்குமூலம்
புலந்த்சகர்: அபூர்வமான தேதியான 12/12/12 அன்று திருமணம் செய்யவும், குழந்தை பெற்றுக்கொள்ளவும் பலர் முடிவு செய்து அதன்படி நடத்தியும் காட்டினர். பிரபலமான சிலருக்கு விவாகரத்தும் கிடைத்துள்ளது. ஆனால் அதே நாளில் உத்தரபிரதேச மாநிலத்தில் ஒருவர் தற்கொலை செய்துகொண்டு தன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
அங்குள்ள புலந்த்சகர் மாவட்டம் நரோரா பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணா பால். தனது தோட்டத்தில் பூச்செடிகளை வளர்த்து, வியாபாரம் செய்து வந்தார். மனைவி 2 மகள்கள், ஒரு மகன் ஆகியோருடன் வசித்து வந்த இவர் தன்னுடைய மரணத்தை தானே நிர்ணயிக்கவேண்டும் என்று முடிவு செய்தார்.
இதற்காக தனது மரண வாக்குமூலத்தை 12 பக்கங்களில் எழுதினார். கடவுளின் விருப்பப்படி 12.12.1972 அன்று நான் பிறந்தேன் ஆனால், என் பெற்றோர்கள் என்னை பள்ளியில் சேர்க்கும் போது என் பிறந்த தேதியை 10.10.1972 ஆக பதிவு செய்து விட்டனர். கடவுளின் விருப்பத்திற்கு மாறாக, கடவுளுக்கே சவால் விடும் வகையில், கடவுளின் கையில் உள்ள என் மரண விதியை, என்கையில் நான் எடுத்துக் கொண்டேன். என் மரணத்தின் மூலம் நான் சத்திய யுகத்தை வரவழைக்கப் போகிறேன் என்று அதில் எழுதப்பட்டிருந்தது.
இதனை 12 செட் ஜெராக்ஸ் எடுத்து வைத்துக்கொண்டார் பின்னர் டெல்லி அருகே உள்ள காசியாபாத்திற்கு சென்ற கிருஷ்ணா பால், அங்குள்ள பிரதாப் விகார் என்ற குடியிருப்பு பகுதியில் உள்ள 80 அடி உயர குடிநீர் தொட்டியின் ஏணியில் ஏறினார். காலை 10 மாணியளவில் தண்ணீர் தொட்டி மீது ஏறிய அவர், ஒரு பையில் கற்களையும் ஒரு கயிறையும் கொண்டு சென்றார். அங்கிருந்த படி, தனது தற்கொலை வாக்குமூலத்தில் ஜெராக்ஸ் பிரதிகளை கீழே வீசி எறிந்தார். இதன் பின்னர் தனது கழுத்தில் கயிற்றைக் கட்டிக் கொண்ட அவர், 80 அடி ஆழமுள்ள தண்ணீர் தொட்டியில், கத்திக் கொண்டே பாய்வதற்கு முற்பட்டார்.
கீழே நின்றிருந்தவர்கள், இதைக் கண்டு பதற்றமடைந்தார்கள் அவர்களில் சிலர், கிருஷ்ணா பாலை காப்பாற்ற ஏணிப்படிகளில் ஏறி மேலே செல்ல முயற்சித்தனர். உடனே பையில் கொண்டு போயிருந்த கற்களால், தன்னை காப்பாற்ற வந்தவர்கள் மீது அவர் எறியத்தொடங்கினார். பொது மக்களில் சிலர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
விஜய் நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தற்கொலை முடிவை கைவிட்டு கீழே இறங்கி வரும்படி கூறினர். ஆனால் அதனைக் கேட்காமல், என் முடிவை யாராலும் மாற்ற முடியாது என்று கூறியபடி, சரியாக காலை 11.05 மணிக்கு தண்ணீர் தொட்டிக்குள் குதித்து விட்டார் கிருஷ்ணா பால். அவரை பின்தொடர்ந்து, போலீசாரும் தண்ணீர் தொட்டிக்குள் குதித்து, அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், வரும் வழியிலேயே கிருஷ்ணா பாலின் உயிர் பிரிந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர்.
கிருஷ்ணா பால் ஒருவேளை மனநோயாளியாக இருக்கலாம்' என்று காசியாபாத் போலீஸ் சூப்பிரண்டு ஷிவ் ஷங்கர் சிங் யாதவ் நிருபர்களிடம் தெரிவித்துள்ளனர். 12/12/72 ல் பிறந்து 12/12/12 அன்று உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் நரோரா பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.












Click it and Unblock the Notifications