21 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை: ஜெ தலைமையில் பிரம்மாண்ட விழா

ஆசிரியர் தகுதித் தேர்வின் மூலம் 18,382 பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டு விரும்பிய இடங்களை தேர்வு செய்தனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் 2308 பேருக்கும் இன்று பணி நியமன ஆணை வழங்கப்படுகிறது.
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று நண்பகல் 12 மணிக்கு பள்ளிக் கல்வித்துறை சார்பில் பிரமாண்ட விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 30 ஆயிரம் பேர் அமரக்கூடிய வகையில் பிரமாண்ட பந்தல் போடப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா இந்த விழாவில் கலந்து கொண்டு புதிதாக தேர்வு செய்யப்பட்ட 21 ஆயிரம் ஆசிரியர்களில் 36 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்குகிறார். மீதமுள்ள ஆசிரியர்களுக்கு அந்தந்த மாவட்டங்களை சேர்ந்த அமைச்சர்கள் பணி நியமன ஆணையை வழங்குகிறார்கள். இதனைத்தொடர்ந்து கல்வி திட்டங்களை தொடங்கி வைத்து மாணவ-மாணவிகளுக்கு நல உதவிகளை முதல்வர் வழங்குகிறார்.
இந்த விழாவிற்காக ஒவ்வொரு மாவட்டங்களில் இருந்தும் ஆசிரியர்கள் பஸ்களில் சென்னைக்கு அழைத்து வரப்படுகிறார்கள். 500-க்கும் மேற்பட்ட பஸ்களில் வரும் ஆசிரியர்கள் 38 பள்ளிகளில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு குளியல் அறை, கழிவறை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
தமிழக கல்வித்துறை வரலாற்றில் ஒரே நேரத்தில் 21 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பணி நியமனம் செய்யப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications